தேர்தலுக்காக திருமணத்தையே தள்ளிப் போட்ட வேட்பாளர் – கொல்கத்தாவில் கூத்து
கொல்கத்தா: மக்களைவைத் தேர்தலுக்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளிப் போட்டுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டராக இருப்பவர் 34 வயது சவுமித்ர கான். அக்கட்சியின் சார்பில் பிஸ்னுபூர் மக்களவை தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜியால் தேர்வு செய்யப்பட்டவர்.
இங்கு மே 7 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, இவர் பாங்குரா மாவட்டத்தில் உள்ள கோதுல்பூர் பகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். கடந்த டிசம்பரில் திரிணாமுல் காங்கிரசுக்கு கட்சி மாறினார். இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து, இவரது பெற்றோரால் ஏப்ரல் மாதத்தில் நாள் குறிக்கப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தபோது, திரிணாமுல் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றது தெரியவந்தது. இதனால் திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு தேர்தல் முடிவுக்காக இவர் காத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "மம்தா பானர்ஜி வேட்பாளராக என்னைத் தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிற செய்தி.
அவர் என்னைத் தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கவேயில்லை. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்ட நிலையில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்தது.
ஏப்ரல் மாதத்தில் திருமணநாள் குறித்து வைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் தேர்தல் வேலைகள் மற்றும் தேர்தல் முடிவு வரை திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications