பி.எப். கணக்குத் தகவலுக்காக புதிய இணையதளம் தொடக்கம்!
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்கள் கூடுதலான சேவைகளைப் பெற புதிய வசதிகளுடன் கூடிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தினை பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சுமார் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்திய அளவில் சந்தாதாரர்களாக உள்ளனர். இவர்களுக்கு யுனிவெர்சல் கணக்கு எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு ஒரு தொழிலாளர் மாறுகிற போதும், தொடர்ந்து அதே கணக்கைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறுகிறபோது, சந்தாதாரர்கள் தங்களது பி.எப். கணக்கினைப் புதிய நிறுவனத்துக்கு மாற்றுமாறு விண்ணப்பிக்கவும் தேவை இல்லை.
தொழிலாளர்கள், இந்த யுனிவெர்சல் எண்ணின் மூலமாக தங்களது சந்தாவை வேலை செய்யும் நிறுவனம் ஒழுங்காக செலுத்தி வருகிறதா என்பதை கண்டறியவும் முடியும்.
மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.