"ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தில் ஈரோடும் இணைக்கப்பட்டது
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான நகரங்கள் பட்டியலில் ஈரோடும் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
டெல்லி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தின் ஈரோடு நகரமும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுவரை 99 நகரங்கள் இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியா முழுவதிலும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளோடு மேம்படுத்தும் பொருட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2015ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி என்னும் திட்டத்தை கொண்டு வந்தது.
இதனடிப்படையில் இதுவரை நான்கு கட்டங்களாக 90 நகரங்கள் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் இதுவரை அதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம்,வேலூர், தஞ்சாவூர், வேலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
தற்போது மேலும் அந்த பட்டியலில் 9 புதிய நகரங்கள் இணைந்துள்ளன. சில்வாசா, கவரட்டி, டையூ, பீகார் ஷரீப், இட்டா நகர், ரேபரேலி, மொரதாபாத், ஷஹரன்பூர் ஆகிய நகரங்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் தமிழகத்தில் இருந்து ஈரோடு நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்து உள்ளது. விரைவில் இதற்கான திட்டப்பணிகள் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.