காங். சார்பில் போட்டியிட்டிருந்தால் மோடியே காலியாகியிருப்பார்.. காங். தலைவர் அதிரடி
மும்பை: நரேந்திர மோடியே கூட காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்தால் பெரும் தோல்வியைத்தான் தழுவியிருப்பார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸை கேவலப்படுத்தி விட்டார் சஞ்சய் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர் சஞ்சய் நிருபம்.
இதுகுறித்து சஞ்சய் நிருபம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும், அரசும் மக்கள் நலனுக்காகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தன. அப்படி இருந்தும் ஆட்சிக்கு எதிராக வீசிய கடும் எதிர்ப்பு அலை காரணமாக கட்சிக்கு பெரும் அடி விழுந்து விட்டது.
இந்த நிலையில் மோடியே கூட காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்தால் பெரும் தோல்வியைத்தான் தழுவியிருப்பார்.
காங்கிரஸ் கட்சி 10 வருடம் ஆட்சியில் இருந்தது. பல காரணங்களால் மக்களுக்கு காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டு விட்டது. கோபம் இருந்தது. அனைத்தும் சேர்ந்து எங்களை வாரி விட்டு விட்டது.
ஆனாலும் லோக்சபா தேர்தல் முடிவுகளால் இந்த வருடக் கடைசியில் மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றே கருதுகிறேன். காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தற்காலிகமானது. மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் இதுபோன்று நடைபெறாது. மாநில சட்டசபைத் தேர்தல் வேறு, லோக்சபா தேர்தல் வேறு என்றார் அவர்.
சஞ்சய் நிருபத்தின் பேச்சால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சஞ்சயின் பேச்சு சரியல்ல என்று காங்கிரஸார் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.