ஓட்டு எந்திரத்தில் முறைகேடு புகார்கள் எதிரொலி... டெல்லியில் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம்
மின்னனு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் நடக்கிற தேர்தல்களில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது அண்மைக்காலமாக பெருத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இதன் காரணமாக மின்னணு ஓட்டு எந்திரங்களை ஒழித்துக்கட்டிவிட்டு மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து மனுக்களும் அளித்திருந்தனர்.
இதனையடுத்து, அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் கமிஷன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் குறித்து தேர்தல் ஆணையம் நிகழ்ச்சி நிரல் வெளியிட்டுள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில், அதன் இரு அணிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.