அடுத்த ஓட்டு வேட்டை.. ஜெயின் சமூகத்துக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: ஜெயின் சமூகத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
நாட்டில் ஜெயின் சமூகத்தினர் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜெயின் சமூகம் சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது. ஜெயின் சமூக பிரதிநிதிகள் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
அதை அவர், பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த நிலையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். அதைத் தொடர்ந்து ஜெயின் சமூகத்திற்கான அரசு சலுகைகள் வழங்கப்படும். ஏற்கனவே முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர் மற்றும் பார்சி இனத்தவர் சிறுபான்மையினர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பலதரப்பு மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.