பத்வாக்களை மக்கள் மீது திணிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
பத்வாக்கள் விடுவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி விஷ்வ லோச்சன் மதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே. பிரசாத் மற்றும் பி.சி. கோஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
இஸ்லாமிய பத்வாக்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் உத்தரவுகள் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது அல்ல. சட்டத்தால் அனுமதிக்கப்படாத எதையும் மக்கள் பின்பற்ற வேண்டியது இல்லை. இஸ்லாமிய தலைவர் எந்த விஷயத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பத்வா விடலாம். ஆனால் இது ஒரு சாதராண மனிதனின் கருத்தை ஒத்துப் போகும்.
பத்வாக்களால் யாராவது பாதிக்கப்பட்டுகிறார்கள் என்றால் அவர்களை காப்பாற்ற நாங்கள் நிச்சயம் வருவோம். சில பத்வாக்கள் சமூகத்தின் நலனுக்காக விடப்படுகிறது. ஆனால் பத்வாக்கள் யாரையும் கட்டுப்படுத்தாது.
இந்து மதத்தில் சங்கராச்சாரியாக்கள், மண்டலேஸ்வரர்கள் மற்றும் மகாமண்டலேஸ்வர்கள் உள்ளனர். அவர்கள் கூறுவதை சிலர் பின்பற்றுகிறார்கள். ஆனால் அதற்கு சட்ட அனுமதி இருக்கிறதா?
யாராவது பத்வாக்களையோ, இஸ்லாமிய மத தலைவர்களின் உத்தரவுகளையோ பின்பற்றினால் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆகும். பத்வாவை யாராவது பின்பற்றவில்லை என்றால் அவர்களை காக்க நீதித் துறை உள்ளது என்றனர்.
பத்வாவை ஏற்றுக் கொள்வது தனிப்பட்ட நபரின் விருப்பம் என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.