சுகோய் போர் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணை... புதிய சாதனை படைத்தது இந்திய விமானப்படை
டெல்லி: சுகோய் 30 ரக போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நீண்ட தூரம் பறந்து தாக்குதல் நடத்தும் போர் விமானங்களில் சக்திவாய்ந்த ஏவுகணை இணைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு இருப்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி மையமான டி.ஆர்.டி.ஓ., ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவற்றை பரிசோதித்துப் பார்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, போர்விமானத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநவீன ஏவுகணைகளை வடிவமைப்பதிலும் அது ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த பிரமோஸ் ரக ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ தயாரித்து வருகிறது. இவற்றை இந்தியாவிடம் உள்ள அதிநவீன மற்றும் நீண்ட தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் சுகோய்-30 ரக போர்விமானங்களில் பொருத்தி சோதித்துப் பார்க்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் விமான நிலைய பகுதியில் நேற்று நடைபெற்றது. அப்போது சீறிப்பாய்ந்த பிரமோஸ் ஏவுகணை விண்ணில் இருந்து வெகுதூரம் தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்தியாவின் இந்த சோதனையை நேற்று உலகின் பல நாடுகள் கூர்ந்து கவனித்தது.
இந்த சோதனையின் வெற்றி மூலம் சுகோய்-30 ரக போர்விமானத்தையும், பிரமோஸ் ஏவுகணையும் ஒருங்கிணைத்து தாக்கும் வல்லமை இந்திய ராணுவத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.
இதன் மூலம் எதிரியின் நுழைய முடியாத எல்லைக்குள் கூட பிரமோஸ் ஏவுகணை ஊடுருவி கண்களுக்கு தென்படாத பகுதிகளில் தாக்குதல் நடத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்து வரும் மாதங்களில் 2.5 டன் எடை கொண்ட பிரமோஸ் ரக ஏவுகணையை சுகோய்-30 விமானங்களில் பொருத்தி அசல் சோதனை நடத்த இருப்பதாக டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றிகரமான சோதனை தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின்(நாசிக்) தலைமை நிர்வாக இயக்குனர் சுதிர்குமார் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நீண்ட தூரம் பறந்து தாக்குதல் நடத்தும் போர் விமானங்களில் சக்திவாய்ந்த ஏவுகணை இணைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு இருப்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த சாதனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை, பிரமோஸ் ஏவுகணை திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி'' என்றார்.