பிரியங்காவைத் தொடர்ந்து அகமது பேடல் 'என் நண்பரே'.. தொடரும் மோடியின் 'தூர்தர்ஷன்' பேட்டி சர்ச்சை!
டெல்லி: நரேந்திர மோடியின் தூர்தர்ஷன் பேட்டி தொடர்பான சர்ச்சை இப்போதைக்கு ஓய்வதாக இல்லை போலும்.. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவைத் தொடர்ந்து அகமது படேல் குறித்தும் மோடி தெரிவித்த கருத்துகள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆனால் பிரியங்காவை மகள் போன்றவர் என்று அந்த பேட்டியில் சொல்லவே இல்லை என்கிறது மோடி தரப்பு.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிதான் இப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பேட்டியில் மோடி, பிரியங்கா காந்தியை தமது மகள் போன்றவர் என்று கூறியிருந்ததாகவும் அதை தூர்தர்ஷன் எடிட் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.
நான் ராஜிவ் மகள்- பிரியங்கா
இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, என் தந்தை இந்த நாட்டுக்காக உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவரைத் தவிர இந்த உலகத்தில் நான் யாரையும் நேசிக்கவில்லை. மோடியின் இந்த கருத்தை என்னால் ஏற்க முடியாது. நான் ராஜிவ்காந்தியின் மகள் மட்டுமே என்று கூறியிருந்தார்.
ப.சிதம்பரம் கருத்து
மோடியின் இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரமோ, பிரியங்காவை மோடி தமது மகள் போன்றவர் என்று கூறியிருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.. ஆனால் மோடியை தமது தந்தையின் ஸ்தானத்தில் வைத்து பிரியங்கா பார்ப்பாரா என்பது சந்தேகமே என்றார்.
எடிட் செய்ததில் உள்நோக்கம் இல்லை- தூர்தர்ஷன்
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தூர்தர்ஷனோ, மோடியின் பேட்டியை எடிட் செய்ததில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. சில தொழில்நுட்ப காரணங்களுக்காகத்தான் மோடியின் பேட்டி எடிட் செய்யப்பட்டதே தவிர அதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. இதில் எந்த ஒரு நபரின் தலையீடும் இல்லை என்றும் கூறியது தூர்தர்ஷன்.
பிரியங்காவை பற்றி அப்படி சொல்லவில்லை- மோடி தரப்பு
அதே நேரத்தில் மோடியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரியங்காவை மகள் போன்றவர் என்று பேட்டியில் அவர் சொல்லவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், மோடியின் பேட்டி ஏன் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை? மோடி அப்படி கூறாத ஒரு விஷயத்தில் ஊடகங்கள் முந்திக் கொண்டு ஏன் பிரியங்காவிடம் அப்படி கேள்வி கேட்டன? தம்மிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள் மீது பிரியங்கா காந்தி நடவடிக்கை எடுப்பாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளது.
அகமது படேல் பற்றி சர்ச்சை
இதனிடையே சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலை தமது நண்பர் என்று மோடி அந்த பேட்டியில் கூறியிருப்பது புதிய சர்சையை உருவாக்கியுள்ளது.
அகமது படேல் என்நண்பர்- மோடி
மோடி தனது பேட்டியில், காங்கிரஸில் இருந்த போதும் அகமது படேல் எனது சிறந்த நண்பராக ஒருகாலத்தில் இருந்தார். ஆனால் இப்போது என்னுடன் அவர் நெருக்கமாக இல்லை. நான் அழைத்தாலும் என் போன் அழைப்பை அவர் எடுப்பதே இல்லை என்று கூறியிருந்தார்.
மோடியின் நண்பரா?- அகமது படேல் விளக்கம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகமது படேல், 1980ஆம் ஆண்டு மோடியின் வீட்டில் ஒரு நாள் மதிய உணவு சாப்பிட்டேன். அப்போது என் தலைவர் ராஜிவ்காந்திக்கு அதை தெரியப்படுத்தியும் இருந்தேன். இது தொடர்பாக நான் ஏற்கெனவே விளக்கமும் அளித்திருக்கிறேன். 2001ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக மோடி பொறுப்பேற்ற பின்னர் அவருடன் சேர்ந்து ஒரு சிங்கிள் டீ கூட குடித்தது இல்லை என்று கூறியிருக்கிறார்.
இப்போதைக்கு இந்த சர்ச்சை ஓய்வதாக இல்லை போல!
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/Y4TI4xv_3L4?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>