ஜல்லிக்கட்டு வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகம், கர்நாடகா அரசுகள் இயற்றிய சட்டங்களை எதிர்த்து,விலங்குகள் ஆர்வல அமைப்பான, 'பீட்டா' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஜனவரியில் இந்த வழக்குகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளின் புதிய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
வீடியோ ஆதாரத்துடன் வழக்கு
இதனிடையே ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. மிருகவதைக்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் பீட்டா மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
15 பேர் மரணம்
தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறும் செயல். மேலும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள விலங்குகளுக்கான ஐந்து அடிப்படை உரிமைகளை மீறுவதாக தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றிய பிறகு நடந்த போட்டிகளில் ஐந்து காளைகள், 15 மனிதர்கள் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு சேதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசுக்கு நோட்டீஸ்
கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான, பீட்டா அமைப்பின் மனு தொடர்பாக, நான்கு வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.
அரசியல் சாசன அமர்வு
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் பொதுசட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற இயலுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடலாமா என்பது பற்றி, உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தது.
ஜல்லிக்கட்டு சட்டம் செல்லுமா?
இந்த நிலையில் இந்த தை பொங்கல் திருநாளில் எந்த தடையும் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணக்கு வந்தது. 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த ஜல்லிக்கட்டு அரசியல் சட்டத்திற்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். ஜல்லிக்கட்டு கலாச்சாரம் தொடர்புடையதா என்பது பற்றியும் நீதிபதிகள் விசாரித்து இறுதி தீர்ப்பு அளிப்பார்கள்.