மன்னாரில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி கைது
மன்னார்: இலங்கையின் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி என்று கூறப்படும் ஒரு நபரை இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனராம்.
இவரது பெயர் தங்கத்துரை ஜெயின்ஸ் (38). இவர் மன்னார், பனங்கட்டிக்கொட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் வெள்ளிக்கிழமையன்று கோர்ட்டுக்குப் போய் விட்டுத் திரும்பியபோது போலீஸார் கைது செய்துள்ளனர்.
20 வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தவர் தங்கத்துரை. இவரது கைது குறித்து தங்கத்துரையின் மனைவிக்கும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனராம். தனது கணவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த வழக்கு விசாரணைக்காக அவர் மன்னார் நீதிமன்றத்திற்கு சென்று, விசாரணை முடிந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த போது வெளியில் நின்றுகொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனது கணவரை கைது செய்துள்ளதாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என தனது கணவரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும் கைதுசெய்யப்பட்டவரின் மனைவி தெரிவித்தார். எனினும் தனது கணவர் 20 வருடங்களுக்கு முன்பே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தார் என்றும், பின்னர் திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அவரைக் கைது செய்துள்ளதாக தங்கத்துரையின் மனைவி கூறியுள்ளார்.