முன்னாள் மத்திய அமைச்சர், மகாராஷ்டிர முதல்வர் ஏ.ஆர். அந்துலே மரணம்
மும்பை: முன்னாள் மகாராஷ்டிர மாநில முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.ஆர். அந்துலே இன்று மும்பையில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 85. மனைவி நர்கீஸ், மகன் நவேத், மகள்கள் நீலம், ஷப்னம், முபீனா ஆகியோர் அவருக்கு உள்ளனர்.
கடந்த சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார் அந்துலே. அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் ப்ரீச்கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர் அந்துலே.
பாரிஸ்டர் அந்துலே என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்துலே, மகாராஷ்டிராவின் முதல்வராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர் என்ற பெருமையும் படைத்தவர். 1980ம் ஆண்டு ஜூன் முதல் 1982ம் ஆண்டு ஜனவரி வரை அவர் முதல்வராக இருந்தார். இந்திரா காந்தியிடம் நற்பெயர் பெற்றவர். அவர்தான் அந்துலேவை மகாராஷ்டிர முதல்வராக தேர்வு செய்தார்.
1995ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் மத்திய அமைச்சராக ஒருமுறை இருந்துள்ளார்.
அந்துலேவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான ரெய்காட் மாவட்டம் அம்பெட் கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் என அவரது மருமகன் முஷ்டாக் அந்துலே கூறியுள்ளார்.