முஸ்லிம்கள் கொரோனா தடுப்பூசியை தவிர்க்கிறார்கள்.. பா.ஜ.க.வின் திரிவேந்திர சிங் ராவத் சர்ச்சை பேச்சு!
டேராடூன்: முஸ்லிம்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் தவிர்க்கிறார்கள் என்று உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார். அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும்போதுதான் கொரோனா முழுமையாக விலகும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆட்டம் போட்டு கொண்டிருந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. 3,00,000-க்கு மேல் சென்று மிரட்டிய தினசரி பாதிப்பு இப்போது 60,000-க்குள் அடங்கி விட்டது.
முழு ஊரடங்கு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவை கொரோனாவை குறைப்பதில் முக்கிய காரணமாக இருந்துள்ளன.
தயங்காம தடுப்பூசி போடுங்க.. தானாக கோவிட் ஓடுங்க.. டாக்டர் முத்து செல்லக்குமாரின் விழிப்புணர்வு பாடல்
மக்கள் ஆர்வம்
இதேபோல் தடுப்பூசி எனப்படும் பேராயுதமும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளன என்றால் அது மிகையல்ல. நாட்டில் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தொடக்க காலத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அதன்பின்னர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் தடுப்பூசிகள் மீதான மக்கள் பயம் முழுவதுமாக குறைந்து போனது.
சர்ச்சை கருத்து
தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையிலும், மக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மையத்துக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமுடன் பல மணி நேரம் காத்திருப்பதை காண முடிகிறது. இவ்வாறு தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள்
ரிஷிகேஷில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது:- "தற்போது நம் நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகங்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்கிறார்கள். அதில் இருந்து விலகி இருக்கிறார்கள். அவர்களுக்கு தடுப்பூசி மீதான தயக்கம், அச்சங்கள் மற்றும் தவறான எண்ணங்கள் பல உள்ளன. தடுப்பூசி தீங்கு விளைவிப்பதில்லை என்று அந்த சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கடும் விழிப்புணர்வு தேவை
நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால், இந்த நோய் முடிவுக்கு வராது. யாரும் அதற்கு இரையாகலாம்,. நாம் ஒரு சூப்பர் ஸ்ப்ரெட்டராக மாறலாம். எனவே அனைவரும் தடுப்பூசி போட முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பவர்களின் சம்பளத்தை நிறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வெகுஜனங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.