சசிகலா, இளவரசி சிறையில் அடைக்கப்பட்டனர்!
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணிடம் இன்று மாலை சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்தான் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டாலும் அவர்தான் இந்த வழக்கின் மாஸ்டர் மைண்ட் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளாசியுள்ளனர்.
கடும் சாடல்
மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்து குவிப்பு நடவடிக்கைகளையும் கடுமையாக சாடினர்.
உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
அத்துடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நீதிபதிகள் பிசி கோஷ், அமித்வா ராய் முன்னிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் இன்று காலை வாய்மொழியாக சரணடைய கால அவகாசம் கோரினார்.
உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
சசிகலாவின் உடல்நிலையை காரணம் காட்டி இந்த கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, கால அவகாசம் எதுவும் தரவே முடியாது என திட்டவட்டமாக கூறி சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.
சரண்- சிறை
உச்சநீதிமன்றம் நிராகரித்ததால் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக பெங்களூருக்கு இன்று காலை சசிகலாவும் இளவரசியும் புறப்பட்டனர். பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாக நீதிமன்றத்தில் இன்று மாலை சசிகலா, இளவரசி இருவர் மட்டும் நீதிபதி அஸ்வத் நாராயணனிடம் சரணடைந்தனர். ஆனால் சுதாகரன் சரணடையவில்லை. சரணடைந்த சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டனர்.