”தங்க வேட்டை” கடத்தலை காட்டிக் கொடுத்தா அள்ளிக் கொடுப்போம் - சொல்கிறது மத்திய அரசு!
டெல்லி: நாட்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் கடத்தல் குறித்து தகவல் தருவோருக்கு அளிக்கப்பட்டு வரும் சன்மானம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, மறைமுக வரிகள் ஏய்ப்பைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் வெகுமதியின் உச்சவரம்பும் ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,
"வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தப்படும் தங்கம் குறித்து தகவல் தருவோருக்கு தற்போது பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில், 10 கிராமுக்கு ரூபாய் 500 வீதம் சன்மானம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பறிமுதல் செய்யப்படும் வெள்ளியின் மதிப்பின் அடிப்படையில், ஒரு கிலோவுக்கு ரூபாய்1,000 வீதம் அளிக்கப்பட்டு வரும் சன்மானம், ரூபாய் 3,000 ஆக அதிகரிப்பட்டுள்ளது.
இதுதவிர, கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, ஆயுதம் மற்றும் வெடிபொருள்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுப்பது, மறைமுக வரி ஏய்ப்பை கண்டறிவது, கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுங்க வரி, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரித் துறையின் துணை ஆணையர் நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் பணிக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த மொத்த வெகுமதியின் உச்சவரம்பு ரூபாய் 15 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாக, இணை ஆணையர், கூடுதல் ஆணையர் நிலைகளில் உள்ள அதிகாரிகளும் இந்த வெகுமதியை பெற தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.