'கூகுளின் ஸ்ட்ரீட் வியூ' திட்டத்திற்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு!
டெல்லி: முக்கிய இடங்களை 360 டிகிரி படங்களாக இணையத்தில் பதிவேற்றும் செய்யும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சம் அனுமதி மறுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மேப் வசதியைப் போன்றே, ஸ்ட்ரீட் வியூ வசதி மூலம் சுற்றுலா தலங்கள், தெருக்கள், சாலைகள், மலைப் பகுதிகள் போன்றவற்றை 360 டிகிரி கோணத்தில் வீட்டில் இருந்துகொண்ட இணைய வசதி உதவியுடன் காணலாம்.
இந்த திட்டத்தை இந்தியாவிலும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு காரணங்களை கூறி ஸ்ட்ரீட் வியூ திட்டத்திற்கு உள்துறை அமைச்சம் அனுமதி மறுத்துள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மும்பை நகர புகைப்படங்களை பார்த்து தாக்குதலை திட்டமிட்டதை முன் உதாரணமாக காட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் சில முக்கிய சுற்றுலா தலங்களில் தாஜ்மகால், குதுப்மினார், டெல்லி செங்கோட்டை, வாரணாசி, மைசூர் அரண்மனை, சின்னச்சாமி ஸ்டேடியம், தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறையுடன் இணைந்து சோதனை அடிப்படையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ பயன்படுத்தப்பட்டு வந்தது.
கூகுள் நிறுவனம் கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்ற திட்டத்தை 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து உலகின் பல நகரங்களில் தற்போது விரிவடைந்துள்ளது.