‘தாவூத் எங்கே இருக்கிறார்.. மத்திய அரசு சொல்லியே ஆக வேண்டும்’: குலாம் நபி ஆசாத்
டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் எங்கு பதுங்கியிருக்கிறார் என மத்திய அரசு கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
1993ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மும்பையை உருக்குலைக்கும் வகையில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட இக்குண்டுவெடிப்புகளில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில், தாவூத் இப்ராஹிம் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பாகிஸ்தானில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது. அவரைக் கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது' என்றார்.
அதோடு, ‘தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, "தாவூத் இப்ராஹிம், தனது இந்தியக் கூட்டாளிகளுடன் பேசிய தொலைபேசி உரையாடலை மறித்துக் கேட்டபோது, அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது என்று நமது புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவரான டெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தாம் எழுதி வரும் புத்தகம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், ‘தாவூத் சரணடைய விரும்பியதாகவும் இது தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை' என்றும் கூறியிருந்தார். பின்னர் அவரே இதனை மறுத்தும் இருந்தார்.
சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநரான சாந்தனு சென்னும், ‘தாவூத் சரணடைய விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை தாவூத் விதித்திருந்தார். இதனால் சி.பி.ஐ. அதை ஏற்கவில்லை' என நீரஜ்குமாரின் பேட்டியை உறுதி செய்தார்.
இதேபோல் மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியும், ‘தாவூத் இந்தியா வந்து வழக்கை எதிர்கொள்ள விரும்பியதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. தாவூத் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை' என்றார்.
மேலும், ‘தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் எங்கு உள்ளார் என்பது கண்டறியப்பட்டால், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும்.
இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் தொடர்புடைய வேறு சில நபர்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அவர்கள் பதுங்கியுள்ள நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதற்கான ஆதாரம் உள்ளது' எனப் பேடியளித்தார்.
மத்திய அமைச்சர்களின் இந்த இருவேறான கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று ராஜ்யசபாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், ‘தாவூத்தின் இருப்பிடம் குறித்த சரியான தகவல்களை மத்திய அரசு கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.