விவசாயிகள் தற்கொலைக்கு பேய்கள் காரணமாம்: சொல்கிறது ம.பி. அரசு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் தற்கொலைக்கு பேய்கள் காரணம் என மாநில அமைச்சர் புபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் சொந்த மாவட்டமான செஹோரில் கடந்த மூன்று ஆண்டுகளில் 418 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில சட்டசபையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. சைலேந்திர பட்டேல் கேள்வி எழுப்பினார்.
பேய்
மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, 418 விவசாயிகள் நிதி பிரச்சனையால் தற்கொலை செய்யவில்லை. அவர்கள் பேய் பிடித்ததால் தற்கொலை செய்து கொண்டனர். இதை நாங்கள் கூறவில்லை. அவர்களின் குடும்பத்தார் தான் தெரிவித்துள்ளனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சிரிப்பு
புபேந்திர சிங்கின் பதிலை கேட்ட பட்டேல் பேய்கள் மீது மாநில அரசுக்கு நம்பிக்கை உள்ளதா என கேள்வி எழுப்பினார். பேய்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மாநில அரசு தெரிவித்ததை கேட்டு சட்டசபையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.
என்னப்பா அரசு?
இது குறித்து பட்டேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேய்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது சிரிப்பிற்குரியது. நிதி நெருக்கடியால் இறந்த விவசாயிகளின் பெயர்களை அரசு பதிவு செய்யவில்லை என்றார்.
நிதி நெருக்கடியே
418 பேரில் 117 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. பயிர்கள் சேதம் அடைந்தது மற்றும் நிதி நெருக்கடியால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்று பட்டேல் தெரிவித்தார்.