ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்ய அலகாபாத் ஹைகோர்ட் கூறிய காரணம் இதுதான்!
இரட்டை கொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், ஆருஷியின் பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது
Recommended Video
அலகாபாத்: கொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷியின் பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் தண்டிக்க கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளர். இதனையடுத்து ஆருஷி, ஹேம்ராஜை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இரட்டை கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பெற்றோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.
நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதி ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார். இவர்களின் 14 வயது பெண் ஆருஷி, கடந்த 2008ம் ஆண்டு மே 16ம் தேதி, வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரை வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மறுநாள் காலை அதே வீட்டு மாடியில் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டது. 2 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்திய சிபிஐ, கொலையில் சரியான துப்பு கிடைக்கவில்லை. ஆருஷியையும் ஹேம்ராஜையும் ஆருஷியின் பெற்றோர்தான் கொலை செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதனால், விசாரணையை முடித்து கொள்கிறோம் என்று கூறி காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதை நிராகரித்த நீதிமன்றம், ஆருஷியின் பெற்றோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து, ஆருஷியின் தாய் நுபுர் கைது செய்யப்பட்டு தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பதிவு செய்வதற்கான விசாரணை, காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கு விசாரணையின் போது சிபிஐ வக்கீல் ஆர்.கே.சைனி தனது தரப்பு கருத்தை முன்வைத்தார். டாக்டர் தம்பதியான ராஜேஷும் நுபுரும் எப்போதும் பணி முடிந்து வீட்டுக்கு இரவில்தான் வருவார்கள். சம்பவத்தன்று வீட்டுக்கு திரும்பிய இருவரும், வீட்டில் ஆருஷியை காணாமல் திடுக்கிட்டனர்.
அவரது படுக்கையறையில் ஆருஷியும் ஹேம்ராஜும் அலங்கோலமாக இருந்தனர். ஆத்திரமடைந்த ராஜேஷ், கோல்ப் மட்டையால் ஹேம்ராஜையும் ஆருஷியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த இருவரும் மயங்கி விழுந்து விட்டனர்.
இதையடுத்து, அவர்களது தொண்டையை அறுவை சிகிச்சை கத்தியால் அறுத்து கொலை நடந்தது போல் காட்டிவிட்டனர். தல்வாரின் வீட்டில் வேலை செய்யும் மற்றொரு பெண் பாரதி, மறுநாள் காலை வந்துள்ளார். வீட்டு கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
மாடியில் இருந்து நுபுர், சாவியை கிழே போட்டு, கதவை திறந்து உள்ளே வரும்படி பாரதியிடம் கூறியுள்ளார்.
வீட்டுக்கு வந்த பாரதி, அங்கு ஹேம்ராஜை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆருஷி கொலை செய்யப்பட்ட இரவு தல்வாரின் வீட்டுக்கு யாரும் வரவில்லை என்று அந்தப் பகுதி வாட்ச்மேன் கூறுகிறார்.
ஹேம்ராஜை கொலை செய்தபின் அவரது உடலை மொட்டை மாடிக்கு கொண்டு சென்று போட்டு விட்டு கதவை பூட்டியுள்ளனர் இவ்வாறு வக்கீல் சைனி கூறினார். இதை மறுத்து தல்வார் தம்பதியின் வக்கீல் கூறுகையில், தல்வார் தம்பதிக்கு ஆருஷி ஒரே மகள். அவளிடம் மிகவும் அன்பு காட்டியுள்ளனர்.
அவளுடைய பிறந்தநாள் மே இறுதியில் வரும். அதற்காக அவளுக்கு விலை உயர்ந்த கேமராவை பரிசாக தந்துள்ளனர். அப்படியிருக்கையில் மகளை பெற்றோரை கொலை செய்துள்ளனர் என்பதை எப்படி ஏற்க முடியும்? வீட்டில் ஹேம்ராஜ் திருடியுள்ளார். அதை ஆருஷி பார்த்து விட்டதால் அவளை ஹேம்ராஜ் கொலை செய்துள்ளார். ஆனால், ஹேம்ராஜை யார் கொலை செய்தது என்பதுதான் தெரியவில்லை என்றார்.
நாங்கள் அப்பாவிகள் என்பது கடவுளுக்கு தெரியும். அவர் எங்களை காப்பாற்றுவார். 10 மாதம் வயிற்றில் சுமந்த குழந்தையை எந்த தாயும் கொலை செய்ய மாட்டாள் என்றார் என்று ஆருஷியின் தாயார் நுபுர் கூறினார்.
தல்வார் தம்பதி செய்த கொலையை அரிதிலும் அரிதாகக் கருதி மரண தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர்கள் வாதிட்டனர் இதன் மீது எதிர்வாதம் செய்த தல்வார் தரப்பு வழக்கறிஞர்கள், இருவர் மீதும் நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், குற்றவாளிகள் மீது கருணை காட்டப்பட வேண்டும் எனக் கூறினர்.
இரண்டு வருடம், 9 மாத விசாரணைக்கு பின் காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பெற்றோரே குற்றவாளிகள் என கடந்த 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனை வழங்கினார் நீதிபதி. அத்துடன், தல்வார் தம்பதிக்கு அபராதமும் அறிவித்தார். அவர் தனது தீர்ப்பில், குற்றவாளிகளான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நுபுர் தல்வார் ஆகிய இருவருக்கும் ஐபிசி 302 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை அளிப்பதாக அறிவித்தார்.
பிரிவு 201-ல் ஐந்து வருடம் மற்றும் பிரிவு 34-ன் கீழ் இரண்டு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படுவதாக கூறினார். வழக்கைத் திசை திருப்ப முயன்றதாக ராஜேஷ் தல்வார் மீது கூடுதலாகப் பதிவான பிரிவு 203க்காக ஒரு வருடம் சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது. டாக்டர் தம்பதியர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
ஆருஷியின் கொலை வழக்கை மையமாக வைத்து தல்வார் என்ற இந்தி படம் வெளியானது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆருஷி கொலை வழக்கில் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோரை விடுவித்துள்ளது. ஆருஷியின் பெற்றோர் மீது சிபிஐ கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் தண்டிக்க கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகாலமாக நடைபெற்ற வழக்கில் திடீர் திருப்பமாக ஆருஷியின் பெற்றோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இரட்டை கொலை வழக்கில் டாக்டர் தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.