குஜராத் சட்டசபை தேர்தல்: வீழ்த்தப் போவது நோட்டாதானா? பீதியில் பாஜக தலைவர்கள்
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக நோட்டாவும் இருக்கும் என்கிற தகவல் அக்கட்சி தலைவர்களை அலற வைத்துள்ளது.
Recommended Video

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக நோட்டாவும் களம் இறங்குகிறது. மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக மீதான கடும் கோபத்தை நோட்டாவுக்கு போட குஜராத் வாக்காளர்கள் காத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அம்மாநில பாஜக தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2014 லோக்சபா தேர்தலில் குஜராத்தில் 4.20 லட்சம் பேர் யாருக்கும் வாக்கு இல்லை என்கிற நோட்டா ஆப்சனுக்கு வாக்களித்தனர். அதற்கு முந்தைய 2012 சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டா ஆப்சனே இல்லை.

காங்கிரஸுக்கு எதிர்ப்பு
2014 தேர்தலைப் பொறுத்தவரையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அலை இருந்தது. அந்த அதிருப்தியை நோட்டாவிலும் போட்டு வாக்காளர்கள் நிம்மதி அடைந்தனர்.

பாஜகவுக்கு எதிர்ப்பு
தற்போது குஜராத் சட்டசபை தேர்தலில் நோட்டா முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. அம்மாநிலத்தில் ஆளும் பாஜக மீது வாக்காளர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். அத்துடன் பல ஜாதி தலைவர்கள் பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் வாக்குகளை ஒருமுகப்படுத்தியுள்ளனர்.

நோட்டாவை நோக்கி....
குறிப்பாக ஜிஎஸ்டியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தொழில்துறையினர் எதிர்ப்பை நோட்டா மூலமாக வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான தீவிர பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி நோட்டா பக்கம் திசை திரும்பிப் போகும் வாக்காளர்களில் பெரும்பாலானோர் பாஜக ஆதரவாளர்கள் என்பதால் அக்கட்சித் தலைவர்கள் பெரும் பீதியடைந்து போயுள்ளனராம்.

இடங்கள் கூடுமாம்
அண்மைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி ஏறுமுகம் கண்டு வருகிறது. தற்போது நோட்டாவுக்கான ஆதரவும் கணிசமாக அதிகரிப்பதால் தங்களுக்கான இடங்கள் மேலும் அதிகரிக்கும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications