முர்மு வெற்றி.. குஜராத்தில் உச்சிக்கேறிய போதையில் மேடையேறிய பாஜக தலைவர்.. வீடியோவால் பதவி இழந்தார்
காந்திநகர்: திரெளபதி முர்முவின் வெற்றியை கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலத்தில் நடந்த விழாவில் உச்சிக்கேறிய போதையுடன் மேடையேறிய பாஜக தலைவரின் வீடியோ வெளியானதால் அவர் தனது பதவியை இழந்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நாட்டின் 15வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார்.
இவரது வெற்றியை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர்.

குஜராத்தில் கொண்டாட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பாஜக சார்பில் திரெளபதி முர்முவின் வெற்றியையொட்டி கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது சோட்டாடேபூர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் பாஜக சார்பில் கொண்டாட்டம் நடந்தது.

போதையில் பாஜக தலைவர்
இதில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் சோட்டாடேபூர் மாவட்ட பாஜக தலைவர் ராஷ்மிகாந்த் வசவா மதுபானம் அருந்தி வந்திருந்தார். உச்சிக்கேறிய போதையில் அவர் தள்ளாடியடி பெண் அமைச்சரான நிமிசா சுதாருடன் மேடையேறினார். போதையில் இருந்ததால் மேடையேற அவருக்கு மற்றவர்கள் உதவினர். அதோடு அவர் மேடையில் அவர் தூங்கிபடி இருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
ராஷ்மிகாந்த் வசாவின் செயலை காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இதுபற்றி குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் "மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதுதான் பாஜக அரசின் மதுவிலக்கா? மதுவிலக்கு என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது, ஏனென்றால் இங்கு அனைத்து இடங்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது'' என சாடியிருந்தார். ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் நிகில் சவானியும் "மகளிர் அமைச்சர் ஒருவருடன் போதையில் பாஜக மாவட்ட தலைவர் மேடையை பகிர்ந்துள்ளார். இவருக்கு மதுபானம் விற்றது யார்? என்பதை போலீசார் கண்டறிவார்களா?'' என கேள்வி எழுப்பி இருந்தார்.
Recommended Video

ராஜினாமா
மேலும் ராஷ்மிகாந்த வசவாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தினர். குஜராத்தில் பாஜக ஆட்சி நடப்பதோடு, மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த வேளையில் அவர் மதுபானம் அருந்தி போதையில் வந்தது பாஜகவுக்கு தர்மசங்டத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராஷ்மிகாந்த் வசவா கடிதம் எழுதி மாநில தலைவரிடம் வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications