பேருந்தை கடத்தி 9 பேரை கொன்ற பஸ் டிரைவருக்கு தூக்குத்தண்டனை!: மும்பை ஹைகோர்ட் உறுதி
மும்பை: பேருந்தை கடத்தி, கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்று 9 பேரை கொன்ற பஸ் டிரைவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்து மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
புனேவை சேர்ந்த சந்தோஷ் மானே (37) என்ற அரசு போக்குவரத்துக்கழக பஸ் டிரைவர், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றை திடீரென கடத்தி, சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு புனே தெருக்களில் கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றார்.
இதில் நடைபாதையில் சென்றவர்கள், வாகனத்தில் வந்தவர்கள் என பல பேர் மீது அந்த பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்; சுமார் 37 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த புனே நீதிமன்றம், சந்தோஷ் மானேவுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மானே மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சந்தோஷ் மானேவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது.