ரூ. 70 கோடி அரசு நிலத்தை ரூ. 1.75 லட்சத்துக்கு வாங்கிய ஹேமமாலினி... ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்!
மும்பை: நடனப்பள்ளி தொடங்குவதற்காக ரூ. 70 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினிக்கு ரூ. 1.75 லட்சத்துக்கு வழங்கி மகாராஷ்டிர அரசு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான ஹேமமாலினி, தற்போது பாஜக எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். மிகச் சிறந்த நாட்டிய கலைஞரான இவர், நாட்டிய விகார் கலகேந்திரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த அறக்கட்டளை மூலம் மும்பையில் நடனப்பள்ளி ஒன்றை அமைக்க திட்டமிட்ட ஹேமமாலினி, இதற்காக கடந்த 1997ம் ஆண்டு மகாராஷ்டிர அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தார். இதற்கென ரூ. 10 லட்சம் முன்பணமாக அவர் செலுத்தியிருந்தார்.
இந்நிலையில், சுமார் 20 ஆண்டுக்கு பிறகு, மும்பை மேற்கு அந்தேரி அருகேயுள்ள ஆசிவாரா பகுதியில் 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை அரசு ஹேமமாலினி நடனப்பள்ளி கட்ட ஒதுக்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்த நிலமானது எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்பது தொடர்பாக சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் ஆர்.டி.ஐ. மனுத்தாக்கல் செய்தார்.
தற்போது அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், "ஒரு சதுர மீட்டர் ரூ.87.50 என்ற அடிப்படையில் 2 ஆயிரம் சதுர மீட்டர் இடம் ரூ.1.75 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டின் மதிப்பின்படி அந்த இடத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.350 விலை. கலையை வளர்ப்பதற்காக அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கும்போது, 25 சதவீத அரசு மதிப்பீட்டில் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சதுர மீட்டர் ரூ.87.50க்கு வழங்கப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘இந்த நிலத்துக்காக ஹேமமாலினி ரூ.10 லட்சம் முன்பணம் செலுத்தியிருக்கிறார். நிலத்தின் மதிப்பு ரூ.1.75 லட்சம் போக மீதி தொகையான 8.75 லட்சம் அரசிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் திருப்பி கொடுக்கப்படும்' என மும்பை புறநகர் கலெக்டர் சேகர் சேனே தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசு நிலத்தை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக ஹேமமாலினிக்கு எதிரான கண்டனங்கள் எழுந்துள்ளன.