காங்.-பாஜக நேரடி மோதல்.. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை இல்லாத சாதனை வாக்குப்பதிவு! டிச. 18ல் ரிசல்ட்
இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. அந்த மாநிலத்தில் நாள் முடிவில் மொத்தமாக 74% வாக்கு பதிவாகி இருக்கிறது.
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கி தற்போது நிறைவடைந்து இருக்கிறது. அந்த மாநிலத்தில் நாள் முடிவில் மொத்தமாக 74% வாக்கு பதிவாகி இருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு இருக்கும் 68 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே தீவிர போட்டி உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் அதிக அளவில் திபெத் அகதிகள் வாக்களித்து இருக்கின்றனர். 1000 திபெத் அகதிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷ்யாம் சரண் நேகி இந்த தேர்தலில் வாக்களித்து இருக்கிறார். அவருக்கு தற்போது 100 வயது பூர்த்தி ஆகியிருக்கிறது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. நாள் முடிவில் அங்கு சரியாக 74% வாக்கு பதிவாகி இருக்கிறது. இதுதான் அந்த மாநிலத்தில் இதுவரை பதிவாகிய வாக்குகளிலேயே மிக அதிக வாக்குபதிவு சதவிகிதம் ஆகும். இதற்கு முன்பு 2012ல் 73.5% வாக்கு பதிவாகி இருந்தது.
தேர்தல் இன்று முடிந்தாலும் முடிவுகள் அறிவிக்க ஒருமாத காலம் ஆகும். தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் 18ம் தேதி அறிவிக்கப்படும்.