இமாச்சல் பிரதேச எக்சிட் போல்: நூலிழையில் பாஜக! டஃப் கொடுக்கும் காங்கிரஸ்! அந்தோ பரிதாப ஆம் ஆத்மி!
சிம்லா : இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜக 35 முதல் 40 இடங்களை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனவும், காங்கிரஸ் 20 முதல் 28 இடங்களில் வரை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் இறங்கிய நிலையில் 7 ஆயிரத்து 881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக நோ.. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும்.. இந்தியா டுடே எக்ஸிட் போல்
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள்
சுமார் 70% வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. உலகின் மிக உயர்ந்த வாக்குச்சாவடி மையமான தஷிகாங்கில் 100% வாக்குகள் பதிவானது. இதை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவை இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
டைம்ஸ் நவ் - ஈடிஜி
டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதேபோல ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகவை ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. டைம்ஸ் நவ் - ஈடிஜி கருத்துக்கணிப்பின்படி 38 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. 68 தொகுதிகளில் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 35 தொகுதிகளை வெல்லும் கட்சியை ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டைம்ஸ் நவ் - ஈடிஜி கருத்துக்கணிப்பின்படி பாஜக 38 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் 28 இடங்களை பிடிக்கும் எனவும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது எனவும் இதரர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பார்க் (BARC)
இதேபோல பார்க் (BARC) கருத்துக்கணிப்பின்படி இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக 35 முதல் 40 இடங்களில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் 20 முதல் 25 இடங்களில் வெற்றிபெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்று இடங்கள் வரையிலும் இதர ஒன்று முதல் ஐந்து இடங்களில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்சிஸ் - மை இந்தியா
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி பாஜக 24 முதல் 34 இடங்களிலும் காங்கிரஸ் 30 முதல் 40 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது எனவும், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் நான்கு முதல் எட்டு இடங்களில் வெற்றி பெறலாம் எனவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. தற்போதைய கருத்துக் கணிப்புகளின் படி குஜராத்தில் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றாலும் ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கடுமையாக போட்டி கொடுக்கும் என்பதே இமாச்சலப் பிரதேசத்தில் கள நிலவரமாக இருக்கிறது.