இந்துக்களே! முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்காதீங்க.. மகாராஷ்டிரா பாஜக அமைச்சரின் மதவெறி கட்டளை!
மும்பை: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் மகாராஷ்டிராவில் இந்துக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உரிமையாளரின் மதத்தைக் கேட்டுவிட்டு பொருட்களை வாங்க வேண்டும்; கடையின் உரிமையாளர் பொய் சொல்வதாக நினைத்தால் ஹனுமன் பஜனை பாட சொல்ல வேண்டும் என்று அம்மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நிதேஷ் ரானே கட்டளையிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேரை கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்தனர். அப்போது, சுற்றுலாப் பயணிகளின் மதம் என்ன என்பதை அறிய உடைகளை கழற்ற வேண்டும் என பயங்கரவாதிகள் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பஹல்காம் படுகொலைக்கு எதிராக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவருக்கு எதிராக சில மாநிலங்களில் விஷம பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கல்வி கற்று வரும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜகவின் அமைச்சர் நிதேஷ் ரானே, எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். ரத்தினகிரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்வதற்கு முன்னர் பயங்கரவாதிகள் உங்கள் மதம் என்ன என கேள்வி கேட்டிருக்கின்றனர் . ஆகையால் இந்துக்களே! நீங்கள் எந்த கடையில் என்ன பொருட்களை வாங்கினாலும் அந்த கடையின் உரிமையாளரின் மதத்தை முதலில் கேளுங்கள்..
இந்துக்கள் இப்படி கேள்வி கேட்டால், சில கடை உரிமையாளர்கள் மதத்தைச் சொல்ல மறுப்பார்கள்; அல்லது இந்துதான் என பொய் சொல்வார்கள். நீங்கள் சந்தேகப்படும்படியாக கடையின் உரிமையாளர் பதில் சொன்னால், உடனே ஹனுமன் பஜனையை பாடச் சொல்லுங்கள். அப்படி பாட மறுத்தால், ஹனுமன் பஜனையை பாட தெரியவில்லை என்று சொன்னால் அந்த கடையில் இருந்து எந்த பொருளையும் வாங்க வேண்டாம்.
முகலாய மன்னர் அவுரங்கசீப், தந்தை மற்றும் மகனைக் கூட ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள், உங்களை எல்லாம் எப்படி மதிப்பார்கள் என சிந்திக்க வேண்டும்.
நாம் அந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் பொருட்களை வாங்கி அவர்களை ஏன் பணக்காரர்களாக்க வேண்டும்? இனி எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதை இந்துக்கள் நடத்தும் கடையில்தான் வாங்க வேண்டும். இதனையே உறுதிமொழியாக அனைத்து இந்துக்களும் எடுத்துக் கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நிதேஷ் ரானே கூறினார்.












Click it and Unblock the Notifications