குழந்தையையும் பல கோடி சொத்துக்களையும் கைவிட்டு துறவறம் பூண்ட ஜெயின் தம்பதி!
மூன்று வயது பெண் குழந்தையையும் 100 கோடி ரூபாய் சொத்துக்களையும் விட்டுவிட்டு ஜெயின் தம்பதி துறவறம் மேற்கொள்கின்றனர்.
போபால்: துறவு வாழ்க்கையை மேற்கொள்வதற்காக மூன்று வயதுக் குழந்தையையும் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் விட்டுச் செல்ல ஜெயின் மதத்தைச் சேர்ந்த தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுமித் ரத்தோர். அவரது மனைவி அனாமிகா. சுமித் ரத்தோர் குடும்பத் தொழிலை செய்து வந்தார். அவரது மனைவி அனாமிகா, ஐடி துறையில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உண்டு.

இந்நிலையில், துறவு வாழ்க்கையை மேற்கொள்வது என தம்பதி முடிவு செய்தனர். அதற்காக, ஜெயின் மத வழக்கப்படி மௌன விரதமிருந்து தீட்சை பெற்றனர். தீட்சை பெற்ற பிறகு அடுத்த நிலையான துறவு வாழ்வை மேற்கொள்வார்கள்.
இதற்காக அவர்களது தலை மொட்டையடிக்கப்படும்; வெள்ளை ஆடை உடுத்தவேண்டும். மேலும் வாயில் துணி கட்டியிருக்க வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ பூச்சிகள் வாய்க்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு கட்ட வேண்டும் என்பது விதி.துறவுவாழ்வை மேற்கொள்வதற்காக தங்களின் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுச் செல்கின்றனர். அவர்களின் பெண் குழந்தையை அனாமிகாவின் தந்தை சந்தலியா கவனித்துக்கொள்வார்.
குழந்தையை விட்டுச் செல்வது போல், 100 கோடி ரூபாய் சொத்துக்களையும் விட்டுச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்த துறவு வாழ்க்கை முடிவை, அவர்களின் குழந்தைக்கு ஒன்பது மாதம் ஆன போதே தீர்மானித்தார்களாம். வரும் 22ஆம் தேதி குஜராத்தில் நடைபெறும் விழாவில் இத்தம்பதி துறவறம் மேற்கொள்வார்கள்.
இந்தியாவில் ஜெயின் மதத்தை 50 லட்சம் பேர் பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு, அகமதாபாத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்த மாணவர் ஒருவர் துறவறம் பூண்டார். இத்தனைக்கும் அவர் ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 99.9 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications