எல்லையில் வாலாட்டினால் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'.. பாகிஸ்தானுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை!
பனாஜி: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. எல்லை பகுதியில் அத்துமீறும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பயங்கரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் எல்லைகளை யாரும் தொந்தரவு செய்தால் பதிலடி கொடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதிய அத்தியாயத்தின் தொடக்கம்
கோவாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய அமித்ஷா விழாவில் பேசியதாவது:- இந்தியா எல்லை பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானபோது ஒரு காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தது. ஆனால் இப்போது இந்தியா பயங்கரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலை அளித்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் பூஞ்ச் மீது தாக்குதல் நடத்தியபோது, இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் வடிவில் தகுந்த பதிலை அளித்தது. அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தது.

தொந்தரவு செய்ய முடியாது
இந்தியா அதே மொழியில் பதில் அளிக்கும் என்ற செய்தியை அது கொடுத்தது. பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையிலான சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒரு முக்கியமான படியாகும். இந்தியாவின் எல்லைகளை யாரும் சீர்குலைக்க முடியாது என்று நாம் எதிரிகளுக்கு தெளிவான செய்தி அனுப்பியுள்ளோம். தற்போது இந்தியாவின் எல்லைகளை யாரும் தொந்தரவு செய்ய முடியாது என்ற செய்தி தெளிவாக உள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.
Recommended Video

17 ராணுவ வீரர்கள் வீர மரணம்
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இரவு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரியில் அமைக்கப்பட்டு இருந்த ராணுவ முகாம்கள் மீது வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு இருந்ததாக தகவல் வெளியானது.

'சர்ஜிக்கல் ஸ்டிரைக்
ஆனால் அடுத்த சில நாட்களில் இந்தியா பயங்கரவாதிகளுக்கு தரமான பதிலடி கொடுத்தது. அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்த நமது ராணுவ வீரர்கள் 7 பயங்கரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்று அழைக்கப்படுகிறது. இந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மனதில் வைத்து பேசிய அமித்ஷா, பாகிஸ்தானுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications