ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்னை எழுப்பினால் தக்க பதிலடி... பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
டெல்லி : வரும் 30 ஆம் தேதி ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினால், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.
கடந்த காலங்களில், ஐ.நா., சபையில் காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்னையை எழுப்பிய போதெல்லாம், இந்திய தரப்பில் இருந்து அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தினர் கவனத்தை ஈர்க்க இந்த வருடமும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எழுப்ப திட்டமிட்டு உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஐ.நா., சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, காஷ்மீர் தொடர்பாக பிரச்னை எழுப்பப்பட்டால், அதற்கு உரிய பதிலளிக்கப்படும். இந்த பிரச்னையை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என கூறினார்.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி நவாஸ் காஷ்மீர் விவகாரம் குறித்து கவலை கொண்டுள்ளதாகவும், இதனை ஐ.நா., சபையில் எழுப்புவார் என்றும் தெரிவித்தார். எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் நவாஸ் முயற்சி செய்வார் எனவும் அவர் கூறினார்.