வெங்காயம், பருப்பு விலை பர்ஸை பதம் பார்க்கிறதா?: இதோ நல்ல செய்தி
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் நாளை இந்தியாவை வந்தடைகின்றன. மேலும் வெங்காயம் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் 1, 800 டன் பருப்பு வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகள் சென்னை மற்றும் மும்பை துறைமுகங்களை வந்தடையும். அக்டோபர் 20ம் தேதிக்குள் 5 ஆயிரம் டன் துவரம் பருப்பும் இந்தியா வந்தடைந்துவிடும். துவரம் பருப்பை இறக்குமதி செய்யுமாறு ஆந்திரா வலியுறுத்தியதால் முதல் கட்டமாக வரும் பருப்பு அந்த மாநிலத்திற்கு அளிக்கப்படுகிறது என்று உலோகங்கள் மற்றும் கனிம டிரேடிங் கார்பரேஷன்(எம்.எம்.டி.சி.) தெரிவித்துள்ளது.
மியான்மரில் இருந்து 5 ஆயிரம் டன் உளுந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உளுந்து வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதிக்குள் சென்னை மற்றும் மும்பை துறைமுகங்களை அடையும் என்று எம்.எம்.டி.சி. தெரிவித்துள்ளது. இரண்டு துறைமுகங்களிலும் தலா 2 ஆயிரத்து 500 டன் உளுந்து வந்திறங்கும்.
மேலும் ஆயிரம் டன் வெங்காயம் அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவை வந்தடையும். உள்நாட்டில் விளைச்சல் இல்லாததால் பருப்பு வகைகள் மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களில் அதிகரித்தது. சில்லறை வியாபாரத்தில் பருப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.150 வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
இதே போன்று வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.