முஸ்லீம்கள்கிட்ட வாங்காதீங்க.. கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக புது பிரச்சாரம்! என்ன தெரியுமா?
கோலார்: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பட்டுக்கூடுகளை இந்து வியாபாரிகளிடம் மட்டுமே விற்க வேண்டும் என சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். இது முஸ்லிம் வியாபாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடர்கிறது. இதையடுத்து அடுத்தடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கடலோர கர்நாடக மாவட்டங்களில் கோவில்களில் கடைகள் நடத்த முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹலால் இறைச்சிகளை வாங்க கூடாது என இந்து அமைப்பினர் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

மாம்பழ வியாபாரத்துக்கு எதிர்ப்பு
அதன்பிறகு பழ வியாபாரம் செய்யும் இஸ்லாமிய வியாபாரிகள் எச்சில் துப்பி விற்பதாகவும், இதை புறக்கணிக்க வேண்டும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதற்கிடையே, மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக குரல் கொடுக்க சில இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். இதை செய்யாவிட்டால் கோவில்களில் போட்டிக்கு ஒலி பெருக்கிகள் மூலம் சாமி பாடல்கள் ஒலிக்க செய்யப்படும் என கூறி வருகின்றனர்.

பட்டுக்கூடு வியாபாரத்தில் பிரிவினை
கர்நாடக மாநிலத்தில் அதிகமாக பட்டுக்கூடு உற்பத்தியாகும் மாவட்டமாக கோலார் உள்ளது. இந்நிலையில் தான் கோலாரில் உள்ள மார்க்கெட்டில் பட்டுக்கூடுகளை இந்து வியாபாரிகளிடம் மட்டும் விற்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். இதை முஸ்லிம் வியாபாரிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இங்கு பட்டுக்கூடு வியாபாரத்தில் முஸ்லிம்கள் தான் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இத்தகைய பிரசாரம் அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதத்தின் அடிப்படையில் வியாபாரம்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‛‛யாரோ சொல்கிறார்கள் என அதை தலையில் ஏற்றி கொள்ளக்கூடாது. வியாபாரம் என்பது மதத்தின் அடிப்படையில் இருக்க கூடாது. நியாயமான முறையில் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம். மாநிலத்தில் தொடர்ச்சியாக இரு பிரிவினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விஷம பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

விவசாயிகளும் எதிர்ப்பு
இந்த பிரசாரத்துக்கு பட்டுக்கூடு விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது வழக்கம்போல் கோலார் நகரில் உள்ள பட்டுக்கூடு மார்க்கெட்டில் வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் கூறுகையில், ‛‛இந்து வியாபாரிகளிடம் மட்டும் பட்டுக்கூடு விற்பனை செய்ய வேண்டும். முஸ்லிம் வியாபாரிகளிடம் பட்டுக்கூடு விற்பனை செய்யக்கூடாது எனக்கூறுவது சரியல்ல. பட்டு விவசாயிகள், பட்டு நூற்பு தொழிலாளர்கள் பிற வகுப்பு, சமுதாயத்தினரை நம்பி தான் தொழில் செய்து வருகின்றனர். இங்கு பாரபட்சம் காட்டக்கூடாது '' என்றனர்.












Click it and Unblock the Notifications