வறுமையில் வாடும் 'ரேமண்ட்ஸ்' நிறுவனர்...சொத்தை பிடுங்கிக்கொண்டு அம்போவென விட்ட மகன்!
இந்தியாவின் ஜாம்பவான் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கிய ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய்பட் சிங்கானியா இன்று தன்னுடைய அன்றாட செலவுகளுக்கே கஷ்டப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லி : இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கிய ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய்பட் சிங்கானியா மகனால் துரத்தப்பட்டதால் பண வசதியின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஆண்களுக்கான நேர்த்தியான ஆடைகளை அறிமுகம் செய்ததில் முக்கிய இடம் பெற்றது ரேமண்ட்ஸ் நிறுவனம். இந்த ஆடை வடிவமைப்புத் தொழிலைத் தொடங்கி இந்தத் துறையில் கோளோச்சியது டாக்டர் விஜய்பட் சிங்கானியா.
முதுமை மற்றும் ஓய்வைக் கருதி விஜய்பட் சிங்கானியா தன்னுடைய வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் ஒப்படைத்திருந்தார். ரேமண்ட்ஸ் நிறுவனத்தில் விஜய்பட்டிற்கு இருந்த ஆயிரம் பங்குகளையும் அவர் மகனுக்கே கொடுத்ததாகவும் தெரிகிறது.
|
வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடீஸ்வரர்
இந்நிலையில் விஜய்பட் சிங்கானியாவிற்கும் மகன் கௌதம் சிங்கானியாவிற்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய விஜய்பட் தெற்கு மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருவதாக மும்பை மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விரட்டிய மகன்
அண்மையில் விஜய்பட் சிங்கானியா சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜேகே ஹவுஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனக்கும் ஒரு குடியிருப்பை தர உத்தரவிடக் கோரியுள்ளார். விஜய் சிங்கானியாவை அனுமதிக்காமல் அவரது மகன் கவுதம் தாக்குவதாகவும் விஜய்பட் கூறியிருந்தார்.
|
ஒரே நபராக அனுபவிக்கும் கௌதம்
1960ம் ஆண்டு கட்டப்பட்ட 14 அடுக்குமாடி ஜேகே ஹவுஸில் விஜயப்ட் சிங்கானியா, அவரது மகன் கௌதம் சிங்கானியா தவிர சிங்கானியாவின் சகோதரர் அஜய்பட் சிங்கானியாவிற்கும் பங்கு இருக்கிறது. அஜய்பட் இறந்துவிட்டதால் அவரது மகன்கள் அனந்த், அக்ஷய் பட்டிற்கும் வீட்டில் பங்கு இருக்கிறது. ஆனால் கௌதம் யாருக்கும் பங்கு கொடுக்காமல் தான் மட்டும் அனுபவித்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக விஜய்பட்டின் மனைவியும் மகன்களும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர்.

கோர்ட் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் என்று கூறினார். எனினும் இது குறித்து விளக்கமளிக்குமாறு ரேமண்ட் நிறுவனத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதிலை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications