மலேசியா விமான விபத்தில் முன்னாள் மத்திய அமைச்சரின் பேரனும் மரணம்
கொல்கத்தா: இந்தியப் பெருங்கடலில் ஜலசமாதியான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தின் பேரன் முக்தேஷும் அவரது மனைவியும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் இரும்பு மற்றும் எஃகு துறை அமைச்சராக மோகன் குமாரமங்கலம் பதவி வகித்தார்.
கடந்த 1973ம் ஆண்டு ஏற்பட்ட விமான விபத்தில் பலியானார். இந்நிலையில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சீன தலைநகர் பீஜிங் சென்ற அவரது பேரனும் பலியாகி விட்டார்.
மகள் வழிப்பேரன்
மோகன் குமாரமங்கலத்தின் மூத்த மகள் உமாவின் மகன் முக்தேஷ் (42). கனடா குடியுரிமை பெற்றவர். அவருக்கு சீன மனைவி ஜியாமோ பாய் (37) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பீஜிங்கில் வசிக்கின்றனர்.
சீன நிறுவனத்தில் அதிகாரி
பென்சில்வேனியாவை தலைமையகமாக கொண்ட எக்ஸ்கோல் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் சீன செயல்பாட்டு துறை தலைவராக முக்தேஷ் பணியாற்றி வந்தார். முக்தேஷின் தந்தை மோலாய் முகர்ஜி, மிட்டல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
கடலுக்குள் ஜலசமாதி
இவர், விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் மனைவியுடன் பயணம் செய்தார். அதிர்ஷ்டவசமாக இவர்களின் பிள்ளைகள் அந்த விமானத்தில் செல்லவில்லை. மார்ச் 8ம் தேதியன்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சீனாவுக்கு சென்ற முக்தேஷும் அவரது மனைவியும் கடலுக்குள் ஜலசமாதியாகிவிட்டனர்.
காத்திருந்த குழந்தைகள்
இதுகுறித்து கொல்கத் தாவில் மூத்த வக்கீலாக உள்ள முக்தேஷின் மாமா மிலன் முகர்ஜி கூறுகையில், முக்தேஷ் எனக்கு மகனை போன்றவர். அவர்களின் வருகைக்காக 2 குழந்தைகளும் சீனாவில் காத்திருந்தனர். ஆனால் கடைசியில் மரணச் செய்திதான் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
நம்பவே முடியவில்லை
கடந்த மாதம் வியட்நாமில் உள்ள சுற்றுலா தலத்தில் முக்தேஷ்-க்ஸியோமோ பாய் தம்பதியர் தங்கியிருந்த புகைப்படங்கள் கடந்த 5-ம் தேதி முக்தேஷ்ஷின் ‘ஃபேஸ்புக்' பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்தபடி கொல்கத்தாவில் இருக்கும் முக்தேஷின் உறவினர் ஒருவர், ‘இந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை' என்று சோகத்துடன் தெரிவித்தார்.