ஷீனாவின் செல்போனை அவர் இறந்த பின் ஒரு வருடமாக பயன்படுத்திய இந்திராணி
மும்பை: மகள் ஷீனா போராவைக் கொலை செய்த பின்னர், அவரது செல்போனை கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்குப் பயன்படுத்தி வந்துள்ளார் இந்திராணி முகர்ஜி என்று போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
மேலும் தனது மகள் உயிருடன் இருப்பதைப் போல காட்டிக் கொள்வதற்காக அந்த செல்போனிலிருந்து எம்.எஸ்.எஸ், மெயில் போன்றவற்றையும் அவர் ஷீனா பெயரில் அனுப்பியும் வந்திருக்கிறார்.
மிக மிகத் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக பல்வேறு அலிபிகளை உருவாக்கி, யாருக்குமே சந்தேகம் வராத அளவுக்கு தெளிவாக நடந்து வந்துள்ளார் இந்திராணி என்றும் போலீஸார் கூறுகிறார்கள்.
எட்டு மணி நேர விசாரணை
இந்திராணியை நேற்று போலீஸார் 8 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதன் பின்னர் போலீஸா கமிஷனர் ராகேஷ் மரியா, செய்தியார்களிடம் விசாரணை குறித்த பல தகவல்களைத் தெரிவித்தார்.
ஆள் மாறாட்டம்
ராகேஷ் மரியா கூறுகையில், ஷீனாவைக் கொலை செய்த பின்னர், ஷீனா உயிருடன் இருப்பதாக காட்டிக் கொள்ள பல்வேறு ஆள்மாறாட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார் இந்திராணி.
அமெரிக்காவில் வாழ்வதாக நம்ப வைத்தார்
தனது மகள் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டது போலவும், அங்கு வாழ்ந்து வருவது போலவும் பிறரை நம்ப வைப்பதற்காக பல காரியங்களை அவர் செய்துள்ளார்.
பீட்டர் மகனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்
தனது மகள் ஷீனா காதலித்து வந்த பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியின் மகனான ராகுல் முகர்ஜிக்கு அவர் ஷீனாவின் செல்போனிலிருந்து இனி நாம் சேர முடியாது. பிரிந்து விடுவோம். என்னை மறந்து விடு என்று அவர் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
2 எஸ்.எம்.எஸ்.
போலீஸாரிடம் ராகுல் முகர்ஜி தெரிவிக்கையில் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷீனாவின் செல்போனிலிருந்து 2 மெசேஜ் வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் ஷீனா கொலை செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை இந்திராணிதான் ஷீனா பெயரில் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
ராகுல் மீது பொய்ப் புகார்
மேலும் ஷீனாவைக் கொலை செய்த பின்னர் ராகுல் தன்னை துரத்துவதாகவும், அதற்குப் பயந்தே ஷீனா அமெரிக்கா போய் விட்டதாகவும் அப்போது போலீஸில் பொய்யான புகார் ஒன்றையும் கொடுத்திருந்தார் இந்திராணி. அது தற்போது பொய்ப் புகார் எனத் தெரிய வந்துள்ளது.
அத்தோடு நிற்காத இந்திராணி
இந்திராணி அத்தோடு நிற்கவில்லை. ராகுலும், ஷீனாவும் வசித்து வந்த வீட்டின் உரிமையாளருக்கு வீட்டு வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்வது போல ஷீனா பெயரில் தகவல் அனுப்பியுள்ளார். மேலும் ஷீனா வேலை பார்த்து வந்த நிறுவனத்திற்கும் ஷீனாவின் பெயரில் இவரே ராஜினாமா கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
கொன்றவர் சஞ்சீவ் கன்னா
ஷீனாவை 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்துள்ளனர். இந்திராணியின் முன்னாள் கணவரான சஞ்சீவ் கன்னாதான் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அப்போது காரில் இந்திராணியும், டிரைவர் ஷியாம் ராயும் உடன் இருந்துள்ளனர்.
மும்பை கொண்டு வரப்பட்ட கன்னா
இந்திராணியிடம் மேலும் சில நாட்கள் தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. தற்போது சஞ்சீவ் கன்னாவையும் போலீஸார் மும்பை கொண்டு வந்து விட்டனர். இந்திராணி முன்பு வைத்து அவரிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.