இந்த ஆண்டு ரயில்வே வருமானம் 1.64 லட்சம் கோடி.. செலவு ரூ. 1.49 லட்சம் கோடி!
டெல்லி: இந்த நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.1,64,374 கோடி வருவாயும், ரூ.1.49 லட்சம் கோடி செலவும் ஆக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ரயில்வே அமைச்சகத்தின் நிதி நிலைமை மாறுபாடு அடைய கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டும் ஒரு காரணமாகும். உதாரணத்துக்கு, ரயில்வே 1050.18 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
இந்த வருவாய், மதிப்பீடு செய்ததைவிட ரூ.94 கோடி குறைவாகும். அதேபோல, பயணிகள் மூலமாக கிடைக்கும் வருவாயும் மதிப்பீடு செய்ததைவிட, ரூ.986 கோடி குறைந்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பீட்டை அதிகரித்ததே இலக்கை எட்டமுடியாமல் போனதற்கு காரணம்.
பட்ஜெட் மதிப்பீட்டுபடி, 2014-15ம் நிதியாண்டில், 1,64,374 கோடி ரூபாய் வருவாயும், 1,49,176 கோடி ரூபாய் செலவீனமும் ஆகும். செயல்பாட்டு விகிதம் 92.5 சதவிகிதமாக இருக்க உள்ளது. கடந்த நிதியாண்டைவிட இது 1 சதவீதம் அதிகமாகும்.
ரயில் பயணிகள் எண்ணிக்கை 12.8 சதவீதம் அதிகரித்து அதன் மூலமாக ரூ.1,39,558 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரம் மறுமதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட இது குறைவாகும். அதே நேரம் பணி செலவீனங்கள் ரூ.97,571 கோடியாக அதாவது கடந்த நிதியாண்டைவிட ரூ.511 கோடி அதிகரித்துள்ளது.
2013-14ம் நிதியாண்டில், எதிர்பார்த்ததைவிட ரயில் பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சி குறைவாக இருந்தது. அதே நேரம் செலவீனமோ எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. ஒரு ரயில் பயணியால் ஒரு கி.மீட்டருக்கான நஷ்டம் 2001-01ம் ஆண்டில் 10 பைசாவாக இருந்தது. இது 2013-14ம் ஆண்டில் 23 பைசாவாக அதிகரித்துவிட்டது
கடந்த ஆண்டில் பயணிகள் ரயில் டிக்கெட் வருவாய் ரூ. 968 கோடி சரிவு
சமீபத்திய ரயில் கட்டண உயர்வால் ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது
கடந்த ஆண்டு ரயில்வேயின் செலவு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் -2015ம் ஆண்டில் ரூ. 11,790 கோடியை சந்தையில் இருந்து திரட்ட ரயில் திட்டம் -ரயில்வேயின் மொத்த வருவாயில் 94% செலவாகிவிடுகிறது. 6% மட்டுமே மிஞ்சியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை உயர்த்தியபோதிலும், தேர்தல் காரணமாக அது உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாகவே புதிய அரசு வந்ததும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.