காங்கிரஸின் "பிரம்மாஸ்திரம்".. குஜராத் தேர்தல் - தாவியவர்களுக்கு பாஜகவில் சீட்! சீனியர்கள் "அப்செட்"
காந்திநகர்: வேறு கட்சிகளில் இருந்து தாவியவர்களுக்கு குஜராத் தேர்தலில் பாஜக வாய்ப்பு கொடுத்து, மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்காததால் அவர்கள் மத்தியில் அதிருப்தி நீடிப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது.

2 கட்ட தேர்தல்
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக குஜராத் தேர்தல் நடைபெற உள்ளது. 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தலும், 93 தொகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தலும் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தல் பிரச்சாரம்
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. மூன்று கட்சிகளின் தேசிய மாநிலத் தலைவர்களும் குஜராத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜக வேட்பாளர் பட்டியல்
கடந்த 9 ஆம் தேதி 160 வேட்பாளர்களை கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. கடந்த சனிக்கிழமை 7 வேட்பாளர்களை கொண்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக தலைமை வெளியிட்டு இருக்கிறது. இதில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

புதியவர்கள்
குறிப்பாக பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியை சேர்ந்த 69 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.. 38 எம்.எல்.ஏக்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள். பாஜகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 69 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் கடந்த 10 ஆண்டுகளில் வேறு கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள்.

காங்கிரஸ் மாஜிக்கள்
குறிப்பாக இந்த வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய பலருக்கு அக்கட்சி வாய்ப்பு அளித்து உள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல், பாகாபாய் பரத் ஆகியோர் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மோகன்சின்ஹ் ரதாவாவின் மகன் ராஜேந்திரசிங் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் விளக்கம்
இந்த நிலையில் குஜராத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில், "தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே பாஜகவை விமர்சிக்கத் தொடங்கி உள்ளார்கள். இதுபோன்றவை அரிதாகவே நடக்கும் நிகழ்வுகள். அதே நேரம் முற்றிலும் எதிர்பார்க்க முடியாதவை என்று சொல்ல முடியாது.

பாஜக தலைமை மீது அதிருப்தி
ஒருபக்கம் பாஜகவை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் பொறுப்பு, ஊழல் குற்றச்சாட்டுகளின் சுமைகளை உணர்கிறார்கள். மறுபக்கம் பாஜக மேலிடம் காங்கிரஸிலிருந்து கட்சி தாவியவர்களை வேட்பாளர்களாக திணித்து உள்ளார்கள். இதன் காரணமாக பாஜக தலைவர்கள் மத்தியில் அதிகளவிலான கோபமும், விரக்தியும் ஏற்பட்டு இருக்கிறது.

அவமானம்
இது பாஜக தலைமைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஜனநாயகமான, வெளிப்படையான கட்சியாகும். எம்.எல்.ஏ. சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியில் வழி இருக்கிறது.

காங்கிரஸ் எடுத்த ஆயுதம்
ஆனால், முழுக்க முழுக்க மையப்படுத்தப்பட்ட, வெளிப்படைத்தன்மை இல்லாத பாஜகவில் முன் எப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற கிளர்ச்சிகள் ஏற்பட்டு உள்ளன." என்றார். மாநில பாஜகவிற்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த பூசலை தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வரும் காங்கிரஸ், மோர்பி பால விபத்தையும் கையில் எடுத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications