பாஜக செய்த மிகப் பெரிய தவறு பேடியின் தேர்வு: நிபுணர்கள்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்கையில் பாஜக ஒன்று உளறியது இல்லை என்றால் தன்னை நியாயப்படுத்தியே பேசியது. பிரச்சாரத்தின்போது பாஜகவுக்கு பல விஷயங்கள் தவறாக நடந்துவிட்டது. கிரண் பேடி ஒன்றும் பாஜகவின் திறமையான தேர்வு அல்ல மாறாக அக்கட்சி தோல்வி அடைய முதன்மையான காரணங்களில் அவரின் தேர்வும் ஒன்று.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. அந்த கட்சியே டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. பிரச்சாரத்தின்போது கட்சியும் சரி, அதன் தலைவர் கெஜ்ரிவாலும் சரி சிலவற்றை சரியாக செய்தனர்.
டெல்லி தேர்தல் முடிவு குறித்து நிபுணர்கள் ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,
பாஜக ஏன் படுதோல்வி அடைந்துள்ளது?
பிரச்சாரத்தின்போது பாஜக சரியாக தன்னை வெளிப்படுத்தவில்லை. அப்போதே வெற்றி பாஜகவின் கையைவிட்டுப் போனது. அதன் தோல்விக்கு அது தான் காரணம் என்று தேர்தல் ஆய்வாளர் டாக்டர் சந்தீப் சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு எதிரான வாக்கு அல்ல ஆம் ஆத்மி கட்சிக்கான வாக்குகள். அவர்களுக்கு நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.
பேடி தேர்வு பெரிய தவறா?
தங்களை நியாயப்படுத்தும் வகையில் கிரண் பேடியை பாஜக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தது. அவரால் கட்சிக்குள் பிரிவினை தான் ஏற்பட்டது. கெஜ்ரிவாலை போன்று பேடியால் மக்களை கவர முடியவில்லை. அவரால் பாஜகவின் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க முடியவில்லை. அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்கியது பாஜக எடுத்த மோசமான முடிவு என்றார் சாஸ்திரி.
கெஜ்ரிவாலுக்கு எது சாதகமானது?
கெஜ்ரிவால் பிரச்சாரத்தின்போது வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டார். அவர் பிரச்சாரத்தின்போது பிறரை பற்றி அதிகமாக குறை கூறவில்லை. அது தான் அவரது கட்சிக்கு பலமாக ஆகிவிட்டது. தான் பாதியில் ஓடுபவர் என்ற இமேஜை மாற்றினார் கெஜ்ரிவால். கடந்த முறை பதவியை ராஜினாமா செய்ததற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவர் தனது தவறுகளை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டு பிரச்சாரத்தை துவங்கினார். அதனால் தான் மக்கள் அவரை மன்னிக்க தயாராகினர். வழக்கமாக யாராவது மன்னிப்பு கேட்டால் மக்கள் அவர்களை மன்னித்துவிடுவார்கள். இது தான் கெஜ்ரிவால் விஷயத்தில் நடந்துள்ளது என்று சாஸ்திரி கூறினார்.
டெல்லி தேர்தல் முடிவு பீகார் தேர்தலில் எதிரொலிக்குமா?
பீகார் விவகாரம் வேறு வகையானது. அங்கு பாஜகவுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி. அங்கும் காங்கிரஸுக்கு பலம் இல்லை. டெல்லி தோல்வியால் பாஜக அல்லாத சக்திகள் புதிய வடிவம் பெறலாம். இதை பீகார் தேர்தலில் பார்க்கலாம்.