அப்ப, ஒபாமா நாடு திரும்பிய பிறகு இந்தியா மீது பாக். தாக்குதல் நடத்தலாமா?
டெல்லி: ஒபாமாவின் இந்திய வருகையின் போது மட்டும் எல்லை கடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார் அமெரிக்கா அதிபர் ஒபாமா. இந்த பயணத்தின் போது எந்த ஒரு பயங்கரவாத செயலிலும் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர்கள் இதற்கு முன்னரும் பல முறை வந்து சென்றுள்ளனர். அப்போதும் கூட இது போன்ற எச்சரிக்கைகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்ததுதான்.. ஆனால் அந்த அதிபர்கள் அமெரிக்கா சென்ற பின்னர் வழக்கம் போல பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை தொடர்வதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கின்றனர்.
இதுதான் தற்போதும் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கும்போதெல்லாம் இந்தியா ஆட்சேபம் தெரிவித்தே வருகிறது. ஆனாலும் அமெரிக்காவின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்குள் தீவிரவாத செயல்களைத்தான் பாகிஸ்தான் மேற்கொண்டும் வருகிறது.
இந்தியாவுக்கு உரிமை இல்லையா?
அமெரிக்கா தன்னுடைய நலன்களுக்கு எதிரான இயக்கங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த உரிமை இருக்கிறது என்கிற போது இந்தியாவுக்கும் அப்படியான உரிமை உண்டு அல்லவா என்பதுதான் இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எழுப்பும் கேள்வி.
540 யுத்த நிறுத்த மீறல்கள்..
கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் 540 யுத்த நிறுத்த மீறல்களை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகபட்சமான யுத்த நிறுத்த மீறல் இதுவாகும்.
கடந்த காலங்களில்
2007ஆம் ஆண்டு 21, 2008-ல் 77, 2009-ல் 28, 2010-ல் 41, 2011-ல் 51 முறை பாகிஸ்தான் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டது. 2013ஆம் ஆண்டு 148 யுத்த நிறுத்த மீறல்களே நிகழ்ந்த நிலையில் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். ஆனால் இதுபற்றியெல்லாம் அமெரிக்கா இதுவரை வாயே திறக்காமல் இப்போது ஒபாமா வருகையை ஒட்டி அறிக்கை விடுவது என்பது இந்தியாவை கடுமையாக அதிருப்தி அடைய வைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சமிக்ஞை?
அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாட்டின் மூலம், ஒபாமா இந்தியாவை விட்டு போன பின்னர் தாக்குதல் நடத்திக் கொள்ளலாம் என்று பாகிஸ்தானுக்கு சமிக்ஞை கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.