சதானந்தகவுடா மகன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வீட்டில் வாஸ்து சரியில்லாததுதான் காரணமாமே!
டெல்லி: தனது மகன் பாலியல் புகாரில் சிக்கியுள்ளதற்கு டெல்லியுள்ள வீட்டின் வாஸ்து அமைப்பு சரியில்லாததுதான் காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா கருதுகிறார். எனவே வீட்டை மாற்ற அவர் முயற்சி செய்துவருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பாவுக்கு பிறகு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற சதானந்தகவுடா, மிஸ்டர் கிளீன் என்று பெயர் எடுத்தவர். இந்நிலையில் அவரது மகன் கார்த்திக் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ளதால் சதானந்தகவுடா பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மகன் மீது புகார்
சதானந்தகவுடா சாஸ்திர, சம்பிரதாயங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். எனவே, தவறு செய்யாத தனது மகன் மீது இதுபோன்ற புகார் எழ காரணம் என்ன என்பது குறித்து நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது வாஸ்து பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேடையை மாற்ற சொன்னவர்
பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்ட துவக்க விழா நடந்தபோது, அப்போது முதல்வராக இருந்த சதானந்தகவுடா, விழா மேடையை கிழக்கு நோக்கிதான் கண்டிப்பாக அமைக்க வேண்டும் என்று மெட்ரோ கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அந்த அளவுக்கு வாஸ்து மீது கவுடாவுக்கு நம்பிக்கை உண்டு.

டெல்லி வீட்டில் கோளாறு
எனவே இப்போதுள்ள பிரச்சினைகளுக்காக, டெல்லியில் உள்ள அரசு வீட்டின் வாஸ்து அமைப்பில் கவுடாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வீட்டை மாற்ற சதானந்தகவுடா முயற்சியை தொடங்கியுள்ளார்.

பெயர் பலகை அபசகுணம்
மத்திய ரயில்வே அமைச்சராக சதானந்தகவுடா முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, டெல்லியிலுள்ள அவரது வீட்டில் மாட்டியிருந்த பெயர் பலகையை காங்கிரஸ் கட்சியினர் பிய்த்து எறிந்தனர். இதை ஒரு அபசகுணமாக சதானந்தகவுடா நினைக்கிறாராம். வீடு மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

கில்லியும் கவுடாவும்
கில்லி திரைப்படத்தில் திரிஷா கதாப்பாத்திரத்தின் விக்கல் சத்தத்தை மறைக்க விஜய் கதாப்பாத்திரமும் விக்கல் சத்தம் எழுப்புவது போல காட்சி அமைந்திருக்கும். வாஸ்து சரியில்லாததால் விக்கல் சத்தம் இப்படி இரண்டு இரண்டாக கேட்கிறது என்று விஜய் கதாப்பாத்திரம் சொல்ல, 'அதற்குதான் வீட்டை விற்றுவிடலாம்' அவரது அம்மா கதாப்பாத்திரம் கூறுவது போல காட்சி இருக்கும். அது போலீஸ் குடியிருப்பு வீடு என்று தெரிந்த பிறகு திருதிருவென அம்மா கதாப்பாத்திரம் விழிக்கும். இப்போது கவுடா நிலையும் அப்படித்தான் உள்ளது போலும்.












Click it and Unblock the Notifications