செருப்பு தைக்கும் தொழிலாளி வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட்.. நோட்டீஸ் அனுப்பியது ஐ.டி.!
செருப்பு தைக்கும் தொழிலாளி வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகமதாபாத் : வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ததாக கூறி, குஜராத்தை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம், சிம்பவடி கிராமத்தை சேர்ந்தவர் மன்சுக் மக்வானா(55). இவர், ஜுனகத் நகரில் உள்ள சாலையோரத்தில் காலணிகள் தைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். ஜன்தன் திட்டத்தின் கீழ் இவர் வங்கி கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், இவரது வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.10 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மன்சுக் மக்வானாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு வந்த நோட்டீசை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிப்பது என்பது சாத்தியமே கிடையாது. நான் தினமும் கஷ்டப்பட்டு 200 ரூபாய் சம்பாதிக்கிறேன். அதை வைத்துதான் எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். நான் எப்படி அவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் செய்ய முடியும் என்றார்.
வங்கி சர்வரில் ஏற்பட்ட குளறுபடியால் இந்த தவறு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்தனர். இதையடுத்து, மக்வானா நிம்மதி அடைந்தார்.












Click it and Unblock the Notifications