‘தூம் 4.. முடிந்தால் பிடி’.. சினிமாபட பாணியில் திருட்டு.. போலீசுக்கு திருடர்கள் சவால்
ஒடிசாவில் பள்ளியில் திருடி விட்டு, போலீசாருக்கு சவால் விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசாவில் பள்ளியொன்றில் கணினி உள்ளிட்ட சில பொருட்களைத் திருடிய மர்மநபர்கள், கரும்பலகையில், 'முடிந்தால் பிடி' என சினிமா பாணியில் சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உதாரணமாகக் கொண்டுதான் பல திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும், சமயங்களில் சினிமாக்களைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் நாயகர்களாக, வில்லன்களாக சிலர் மாற நினைக்கும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.
ஒடிசா பள்ளி ஒன்றில் நடந்த திருட்டு சம்பவமும் அப்படிப்பட்டதுதான். பள்ளிக்குள் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்றதோடு அல்லாமல், சினிமா பாணியில் சவாலும் விட்டுச் சென்றுள்ளனர் திருடர்கள்.

கணினி திருட்டு
ஒடிசா மாநிலம் நபரங்பூரிலுள்ள காதிகுடா பகுதியில் உள்ளது இந்திராவதி திட்ட மேல்நிலைப்பள்ளி. கடந்த வாரம் இந்தப் பள்ளியில் மர்மநபர்களால் திருட்டு சம்பவம் நடைபெற்றது. தலைமையாசிரியரின் அறைக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த கணினி, ஸ்பீக்கர்ஸ், பிரிண்டர்ஸ் என விலையுயர்ந்த பொருட்களாகத் திருடிச் சென்றுள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெற இருந்ததால், அவர்களது பிரிவு உபச்சார விழாவுக்காக வைத்திருந்த இசைக் கருவிகளும் திருடு போயுள்ளன.

சவால்
வழக்கம் போல் பணிக்கு வந்து தன் அறையைத் திறந்த தலைமையாசிரியர் சர்பேஸ்வர் பெஹெரா, அங்கு பொருட்கள் திருடு போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கூடவே, மற்றொரு வகுப்பின் கரும்பலகையில், 'தூம் 4', 'நாங்கள் திரும்புவோம்.. விரைவில் வருவோம்' என்றிருந்தது. மேலும் "முடிந்தால் எங்களை பிடி" என்றும் ஒடியா மொழியில் எழுதப்பட்டிருந்தது.

போலீசுக்கு தகவல்
இவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், திருடர்களை பிடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் கொள்ளை
இதுபோன்ற சம்பவம் அப்பகுதியில் நடப்பது இது முதன்முறையல்ல.. சமீபத்தில் நந்தஹண்டி தொகுதிக்கு உட்பட்ட தஹானா பள்ளியிலும், தென்துளிக்குண்டி தொகுதி கல்வி அலுவலகத்திலும் கணினிகள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் திருட்டுபோயிருந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களும், தற்போது பள்ளியில் திருடியவர்களும் ஒரே கும்பலா, அல்லது வேறு வேறு நபர்களா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications