ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைதில் குழப்பம் நீடிப்பு! 8 நாட்கள் அவகாசம் கோருகிறது பாஜக!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் 8 நாட்கள் அவகாசத்தை பாரதிய ஜனதா கட்சி கோரியுள்ளது. அதே நேரத்தில் மத்திய பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளிக்க வேண்டும் என்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி). இதனால் ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பான குழப்பம் நீடிக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனர் முப்தி முகமது முதல்வராகப் பதவி வகித்து வந்தார். அவர் உடல்நல குறைவால் கடந்த மாதம் 7-ந் தேதி காலமானார்.
முப்தி முகமது சயீத் மறைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் அங்கு புதிய அரசு அமைக்கப்படவில்லை. மறைந்த சயீத்தின் மகளும், எம்.பி.யுமான மெகபூபா அரசு அமைப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவும் இல்லை.
மெகபூபாவைப் பொறுத்தவரையில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி அளித்தால் மட்டுமே புதிய அரசு அமைப்பது குறித்து பரிசீலிப்போம் என்பதில் உஇறுதியாக உள்ளார். ஆனால் ஆட்சியை அமைத்துவிட்டு பேசுவோம் என்கிறது பாஜக.
இதனால் அங்கு இழுபறி தொடர்கிறது. இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக மாநில ஆளுநர் என்.என்.வோரா, இரு கட்சிகளுக்கும் கெடு விதித்திருந்தார்.
இதனிடையே சட்டசபை பாஜக தலைவரான நிர்மல் சிங் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து பேசினார். பின்னர் நேற்று காஷ்மீர் திரும்பிய அவர் ஜம்மு நகரில் மெகபூபாவை சந்தித்தார்.
இந்த பரபரப்பான நிலையில் ஆளுநர் என்.என்.வோராவை மெகபூபா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் மீதான எனது தந்தையின் பொறுப்புகளும், பார்வையும் புனிதமானவை. எனது தந்தைக்கு இருந்த தைரியமும், அனுபவமும் எனக்கு கிடையாது. எனவே, இங்கே நாங்கள் நல்லாட்சி அமைக்கவேண்டும் என்றால் அதற்கு நல்ல சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
காஷ்மீரின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிபந்தனைகளை மத்திய அரசுக்கு மெகபூபா விதித்திருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆளுநர் வோராவிடம் இரு கட்சிகளும் புதிய அரசு அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க 8 நாட்கள் கால அவகாசத்தையும் கோரியுள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைப்ப்தில் குழப்ப நிலை நீடிக்கிறது.