ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு வக்கீலுக்கு ரூ.65,000 அபராதம்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொதுக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ரூ. 65,000 அபராதம் விதித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதம் கடந்த 7ம் தேதி துவங்க வேண்டியது. ஆனால் அன்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் பவானி சிங் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 10ம் தேதியும் பவானி சிங் ஆஜராகவில்லை. ஆனால் அவரது உதவி வழக்கறிஞர் ஆஜராகி மருத்துவ சான்றிதழை சமர்பித்தார். இதையடுத்து நீதிபதி இறுதி வாதத்ததை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் பவானி சிங்கிற்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் பவானி சிங் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி ஜான் பவானி சிங்கிற்கு ஒரு நாள் சம்பளமான ரூ.65,000 அபராதம் விதித்தார். மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்தார். வழக்கை தாமகப்படுத்த இவ்வாறு மனு தாக்கல் செய்ததாக அந்நிறுவனத்திற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்த அவர் நாளையும் பவானி சிங் ஆஜராகவில்லை என்றால் மீண்டும் ரூ.65,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.