ஜெ. சொத்துக்குவிப்பு தீர்ப்பு: கணித கூட்டலில் தப்பு நடந்தது எப்படி?
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் வருவாய் மற்றும் சொத்து மதிப்பை ஹைகோர்ட் கணக்கிட்டதில் தவறு உள்ளதாக சிறப்பு வக்கீல் ஆச்சாரியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், அதுகுறித்து ஒரு சுருக்கமான பார்வை இதோ:
ஜெயலலிதா தரப்பு மொத்தம் 10 நிறுவனங்களிடமிருந்து ரூ.24 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 274 கடன் பெற்றதாகவும், அதில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய கணக்கீடுக்கு பிந்தைய கடன் தொகை ரூ.18 கோடியே, 17 லட்சத்து, 46 ஆயிரம் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதை வருமானமாக கருத வேண்டும் என்றும் நீதிபதி கூறுகிறார். ஆனால், வருமானமாக கருத வேண்டும் என்று நீதிபதியால் கூறப்படும் இந்த தொகை, சரியாக கூட்டப்பட்டால், ரூ.4 கோடியே, 67 லட்சத்து, 46 ஆயிரம் மட்டுமேயாகும்.
இந்த கூட்டலின் அடிப்படையில், ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.34 கோடியே 76 லட்சத்து, 65 ஆயிரத்து 654 என்று நீதிபதி கூறுகிறார். ஆனால், கடன் தொகையை சரியாக கூட்டினால் வரும் தொகையை வைத்து, வருவாய் மதிப்பை கணக்கிட்டால், அது, ரூ.21 கோடியே, 26 லட்சத்து, 65 ஆயிரத்து, 654 மட்டுமே.
எனவே ஜெயலலிதாவிடமுள்ள மொத்த சொத்துக்கள் என்று நீதிபதி குறிப்பிடும் ரூ.37 கோடியே, 59 லட்சத்து, 2ஆயிரத்து 466லிருந்து 21 கோடியே, 26 லட்சத்து, 65 ஆயிரத்து, 654 ரூபாயை கழித்தால், வருமானத்துக்கு அதிகமாக உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.16 கோடியே, 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 வருகிறது.
இந்த சொத்து மதிப்பு, மொத்த வருவாய் மதிப்பில் ரூ.76.75 சதவீதமாகும். ஆனால் தவறான கணக்கீட்டின்படி, சொத்தில் இருந்து வருவாயை கழித்தால்தான் நீதிபதி கூறியதைப்போல வருவாய்க்கு அதிகமான சொத்து மதிப்பு 8.12 சதவீதம் வருகிறது.