ரயிலில் தம்பதியிடம் அநாகரீகமாக நடந்த எம்எல்ஏ சஸ்பெண்ட்: நிதிஷ் அதிரடி நடவடிக்கை !
பாட்னா: பீகாரில் ரயிலில் பயணம் செய்த தம்பதியிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ., சர்பராஸ் ஆலமை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து கடந்த 17-ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தர்பால் சிங் பெடி என்பவர் தன் மனைவியுடன் வந்து கொண்டிருந்தார். அந்த ரயில் பீகார் மாநிலத்துக்குள் வந்த போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சர்பராஸ் ஆலம் ஏறியுள்ளார்.

அப்போது அந்த தம்பதிக்கும், எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்குமிடையே இருக்கை தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் உடன் பயணித்த பெண் பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பாட்னா சந்திப்பில் உள்ள ஜிஆர்பி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சர்பராஸ் ஆலம், நான் அந்த ரயிலில் பயணிக்கவே இல்லை. பீகார் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது பிடிக்காத சிலர் எனது மதிப்பை கெடுக்கும் வண்ணம் என் மீது குற்றம் சுமத்தியுள்ளனர் என்றார்.
இந்நிலையில், குற்ற வழக்கில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டத்தைவிட எம்.பி.யோ அல்லது எம்.எல்.ஏ.வோ பெரிதல்ல. சட்டத்தை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications