ஜேடிஎஸ்-ன் 2 எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திவிட்டது: குமாரசாமி பரபர புகார்
கர்நாடக சட்டசபையில் நாளை பெரும்பான்மை நிரூபிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், 2 எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாக மஜத புகார் கூறியுள்ளது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 2 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் குமாரசாமி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நாளை மாலை 4 மணிக்கு நிரூபிக்க உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.
இந்த நிலையில், தங்களுடைய கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களை பாஜக கடத்திச் சென்றுள்ளதாக மஜத தலைவர் குமாரசாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார். அவர்கள் திரும்பி வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.