தொடர்பை இழந்த இந்திய விமானம்.. நடுவானில் சுற்றி வளைத்த ஜெர்மன் போர் விமானங்கள்..பரபர நிமிடங்கள்
330 லண்டன் சென்ற இந்திய விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்திய விமானத்தை ஜெர்மன் போர் விமானங்கள் சுற்றி வளைத்தன.
மும்பை: 330 பயணிகளுடன் லண்டன் சென்ற இந்திய விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நடுவானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்தை ஜெர்மனி போர் விமானங்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வியாழக்கிழமை 330 பயணிகளுடன் மும்பையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் லண்டன் நகருக்கு புறப்பட்டது. செக் குடியரசின் ஸ்லோவாக்கியா நகரின் நுழைந்த போது இந்திய விமாத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து விசாரிக்க ஜெர்மனி அரசு ஆணையிட்டது. இதனைத்தொடர்ந்து காலோன் நகரில் நடுவானில் இந்திய விமானத்தை 2 ஜெர்மன் போர் விமானங்கள் சுற்றி வளைத்தன.
எனினும், சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி போர் விமானங்கள் திரும்பிச் சென்றன.
கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுவானில் இந்திய விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் அதனை ஜெர்மன் போர் விமானங்கள் சுற்றி வளைத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.