ரூ.100 கோடி சம்பள பாக்கி: ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் வேலை நிறுத்த எச்சரிக்கை!
மும்பை: ரூ.100 கோடி சம்பள நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்த ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக தங்கள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டமும், முதல் காலாண்டு லாப அறிவிப்பும் இன்று நடைபெறும் நிலையில், பைலட்டுகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே போராட்டம்
2009ம் ஆண்டு ஏற்கனவே இதுபோல போராட்டம் நடத்திய பைலட்டுகளால் சில வாரங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் சேவை பாதிக்கப்பட்டது.
ரூ.100 கோடி நிலுவை
பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில் "பைலட்டுகளுக்கு சுமார் ரூ.90-100 கோடி வரை சம்பள நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் விரைவில் இந்த பணத்தை பட்டுவாடா செய்துவிடுவோம் என்றுதான் கூறிவருகிறார்களே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொறுமைக்கும் எல்லை உண்டு
ஆனால் இம்முறை மேலதிகாரிகள் சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கப்போவதில்லை. 15 மாதங்கள் நாங்கள் அமைதி காத்தது போதும் என்று நினைக்கிறோம்" என்றார்.
அறிவிப்பு வரவில்லை
அதே நேரம், பைலட்டுகளிடமிருந்து இதுவரை வேலை நிறுத்தம் குறித்த எந்த அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்று ஜெட் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைலட்டுகள்
ஜெட் ஏர்வேசில் 1,100 பைலட்டுகள் வேலை பார்க்கிறார்கள். இதில் 600 பேர் கமாண்டர்ஸ் என்றும் பிறர் முதல் அதிகாரிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தலா பாக்கி ரூ.15 லட்சம்
கமாண்டர் பதவியில் உள்ளவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், பிற கோ-பைலட்டுகளுக்கு தலா ரூ.7 லட்சமும் வழங்கப்பட வேண்டியுள்ளதாம். ஜெட் ஏர்வேஸ் நஇறுவனத்தின் 24 சதவீத பங்குகளை வளைகுடா நாட்டை சேர்ந்த எதிகாட் விமான நிறுவனம் வைத்துள்ளது. இதன் பங்கு மதிப்பு ரூ.2058 கோடிகளாகும்.