ஜம்மு காஷ்மீர் சட்டசபை திடீர் கலைப்பு.. ஆளுநர் அவசர நடவடிக்கை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையை அந்த மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் திடீரென இன்று இரவு கலைத்து உத்தரவிட்டார்.
முன்னாள் முதல்வர் மஹபூபா முப்தியும், பாஜக கூட்டணி சார்பில் சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க தனித் தனியாக உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஆளுநர் இறங்கினார்.
முன்னதாக தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மஹபூபா. பதிலடியாக சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதுதான் சாக்கு என்று ஆளுநர் சட்டசபையைக் கலைத்து விட்டார்.
லோனே தனக்கு ஆதரவாக 27 பாஜக மற்றும் 18 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறியிருந்தார். இது பெரும்பான்மைக்குத் தேவையான 44 என்ற எண்ணிக்கைக்கு சமமாகும். அதேசமயம், மஹபூபா முப்தி தனக்கு மொத்தம் 56 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் யாருக்கும் வாய்ப்பளிக்காமல் ஆளுநர் சட்டசபையைக் கலைத்து விட்டார். கடந்த ஜூன் மாதம் முதல்வர் பதவியிலிருந்தும், ஆட்சியை விட்டும் விலகினார் மஹபூபா என்பது நினைவிருக்கலாம். அவருக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால் மஹபூபா பதவி விலகினார்.