ஜார்கண்ட்டில் கூட்டணி கட்சி தயவால் காங்கிரசுக்கு லாபம்.. தாங்கி பிடிக்கும் ஜேஎம்எம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணி அமோக முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிதான், அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அந்த கட்சியின் தயவால் காங்கிரஸ் கூட்டணி தாங்கி பிடிக்கப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி நிலவரப்படி ஜார்கண்டில் 21 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 11 தொகுதிகளில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
இவை தேர்தலுக்கு முன்பு மகாகத்பந்தன் கூட்டணி அமைத்துக் கொண்டு பாஜகவுக்கு எதிராக களம் இறங்கியுள்ள கூட்டணி கட்சிகளாகும். காங்கிரஸ் மிகப் பெரிய தேசிய கட்சியாக இருந்த போதிலும் கூட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தான் இந்த கூட்டணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
அதேநேரம், காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபை தேர்தலைவிடவும் 6 தொகுதிகளில் கூடுதலாக முன்னிலை வகிக்கிறது. ஜேஎம்எம் கடந்த தேர்தலைவிட 3 தொகுதிகள் குறைவாக முன்னிலை வகித்து வருகிறது.
அதேநேரம், மகாராஷ்டிராவிலும் இதே போல் தான் நடந்தது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது பாஜக-சிவசேனா கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது காங்கிரஸ். ஆனால் அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளைதான் வெல்ல முடிந்தது.
தற்போது ஜார்கண்டிலும், மாநில கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதான் காங்கிரஸ் கூட்டணியை தாங்கி பிடித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கணிசமான பழங்குடியின மக்கள் வாக்குகளை கொண்டது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு பழங்குடியினர் மத்தியில் செல்வாக்கு உள்ளது. அந்த ஆதரவும் பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையும் சேர்ந்து காங்கிரசுக்கு பலனைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்